×

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி நேரமும் மின்சாரம்: கெஜ்ரிவால் வாக்குறுதி

புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று தனது கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினார். அப்போது எம்எல்ஏக்களிடம் பேசிய கெஜ்ரிவால், ‘‘என்னை கைது செய்து, அதன் மூலம் கட்சியை உடைத்து, பஞ்சாப், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாஜ சதித்திட்டம் தீட்டியிருந்தது. ஆனால் எனது கைதுக்குப் பிறகு அவர்கள் தோற்றுவிட்டனர்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால் 10 உத்தரவாதங்களை அளித்து கூறியதாவது:
இந்த தேர்தலில் மோடியின் உத்தரவாதமா, கெஜ்ரிவாலின் உத்தரவாதமா என்பதை மக்கள் தேர்வு செய்யப் போகிறார்கள். எனது உத்தரவாதம் உண்மையானது. இதைப் பற்றி நான் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் கூட விவாதிக்கவில்லை. ஆனாலும் எனது உத்தரவாதங்களை நிறைவேற்ற அவர்களிடம் வலியுறுத்துவேன். டெல்லியில் நாங்கள் இலவச மின்சாரம், தரமான அரசு பள்ளிகள், மொகல்லா கிளீனிக்குகள் போன்ற உத்தரவாதங்களை நிறைவேற்றி உள்ளோம். ஆனால் மோடி இதுவரை தந்த எந்த உத்தரவாதத்தையும் நிறைவேற்றவில்லை.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால்,நாடு முழுவதும் 24 மணி நேரமும் மின்சாரம், நல்ல கல்வி, சுகாதார வசதிகள், இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவோம். அக்னிவீர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம். சுவாமிநாதன் கமிஷன் அறிக்கைப்படி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவோம். சீனா ஆக்கிரமித்த நிலங்களை மீட்போம். நாட்டில் தொந்தரவில்லாத வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான கட்டமைப்பை கொண்டு வருவோம் என்றார்.

உபி, மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பிரசாரம்
திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வாரம் உ.பி., மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். வரும் 15ம் தேதி லக்கோனவிலும், 16ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரிலும், 17ம் தேதி மும்பையிலும் அவர் பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் வாக்களித்தால் மீண்டும் சிறைக்கு செல்ல மாட்டேன்
மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து மோதி நகர் உள்ளிட்ட இடங்களில் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும் நேற்று ரோடு ஷோ நடத்தினர். அப்போது பேசிய கெஜ்ரிவால், ‘‘நான் அடுத்த 20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் வரும் 25ம் தேதி தேர்தலில் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்தால், நான் மீண்டும் சிறைக்கு செல்ல மாட்டேன்’’ என்றார்.

The post இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 24 மணி நேரமும் மின்சாரம்: கெஜ்ரிவால் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Punjab, ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...