×

மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே குருவாயல்-அழிஞ்சிவாக்கம் இடையே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் கம்பங்கள் இருந்து இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் விபத்து காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இக்கம்பங்களில் மின் இணைப்பை ஏற்படுத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல்-அழிஞ்சிவாக்கம் ஆகிய 2 கிராமங்களுக்கு இடையே மழைக் காலத்தின்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 10 கிமீ தூரம் சுற்றி வருவதற்குள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து குருவாயல்-அழிஞ்சிவாக்கம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டித் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். இக்கோரிக்கையை ஏற்று, சமீபத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு மேம்பாலம் கட்டி பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.

இதனால் அழிஞ்சிவாக்கம், திருக்கண்டலம், பூரிவாக்கம், பெருமுடிவாக்கம், சேத்துப்பாக்கம், பாஷிகாபுரம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் விளைபொருட்களை இந்த மேம்பாலத்தின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்வதற்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது. எனினும், இந்த புதிய மேம்பாலத்தின்மீது புதிதாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தபோதிலும், அதற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாததால், இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் அப்பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.

இதில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வாகன விபத்தினால் படுகாயம், உயிரிழப்பு போன்றவற்றால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குருவாயல்-அழிஞ்சிவாக்கம் இடையே புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருக்கும் கம்பங்களுக்கு மின் இணைப்பை வழங்கி, அவற்றை முறையாக செயல்படுத்த மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Uthukkottai ,Kuruvayal-Achinchivakkam ,
× RELATED பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு...