×

நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு; உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சிக்கிய டார்ச் லைட்: பரபரப்பு தகவல்

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பவ இடத்திலிருந்து தடயவியல் நிபுணர்களிடம் டார்ச் லைட் எரிந்த நிலையில் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான இவர் கட்டுமானம் மற்றும் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவரது உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்துபுதூரிலுள்ள அவரது தோட்டத்தில் 4ம் தேதி மீட்கப்பட்டது.

அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு 9 நாட்கள் கடந்த பின்பும் எவ்வித முகாந்திரமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தனிப்படை போலீசார் உள்ளனர். கடைசியாக ஜெயகுமாரின் செல்போன் குட்டம் பகுதியில் சுவிட்ச் ஆப் ஆகியிருப்பதை வைத்து அவருக்கு வந்த செல்போன் அழைப்புகள், அவர் யாரிடம் பேசி உள்ளார். என்பதை கண்டுபிடிக்க கால் லிஸ்ட் மூலம் விசாரணை தொடர்ந்தனர். மேலும் சம்பவத்தின் போது ஜெயகுமார் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற இடங்கள் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன்படி பெட்ரோல் பங்க், திசையன்விளையில் உள்ள கடையில் டார்ச் லைட் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2ம் தேதி ஜெயகுமார் காரின் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு திசையன்விளைக்கு சென்று கடையில் காய்கறிகள் வாங்கி வீட்டில் கொண்டு கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து காரை ஓட்டிச்சென்ற அவர் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார் என்பதும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவின் அடிப்படையில் தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.மேலும் கடந்த 2ம் தேதி இரவு திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கி சென்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த டார்ச் லைட் எங்கே என்பது குறித்து ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட தோட்டத்தில் தடயவியல் புலனாய்வுத்துறை நிபுணர்கள் மற்றும் தனிப்படை போலீசார் மீண்டும் தடயங்களை 3 மணிநேரமாக அங்குலம், அங்குலமாக தேடினர். அப்போதுதான் அவர் உடல் எரிக்கப்பட்ட குழியில் முழுவதும் எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்றை தடயவியல் நிபுணர்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இந்த டார்ச் லைட் அவர் கொலைசெய்யப்படுவதற்கு முன்பாக திசசையன்விளையில் உள்ள ஒரு கடையில் வாங்கிய டார்ச் லைட்தானா என்பது குறித்து தடையவியல் நிபுணர்கள் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஜெயக்குமார் கொலை நடந்த தோட்டத்தில் இருந்து பெட்ரோல் கேன் மற்றும் உடல் எரிந்த இடத்தில் இருந்து கிடைத்த டார்ச் லைட் உள்ளிட்ட தடயங்கள் மூலம் போலீசார் விசாரணையை விரைவு படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். இக் கொலைக்கான காரணம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கு; உடல் எரிக்கப்பட்ட இடத்தில் சிக்கிய டார்ச் லைட்: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Nellie Congress ,President ,Jayakumar ,Nellai ,Nellai East District Congress ,Nellai district ,Karaichuthuputur ,Vektianvilai ,Nellai Congress ,Dinakaran ,
× RELATED நெல்லை காங்கிரஸ் பிரமுகர்...