×

சேலம் சமூக ஆர்வலர் புகார்: பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி

சேலம்: சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் புகாரின்பேரில், பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி வழங்கியுள்ளது. சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார். அதில், `பாஜ தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகிறார்.

இவர் மதுரையில் பேசும் போது, முத்துராமலிங்க தேவர், அறிஞர் அண்ணாவை பார்த்து கடவுள் பக்தி இல்லாதவர்கள் கடவுள் பக்தி இருப்பவர்களை பார்த்து தவறாக விமர்சனம் செய்தால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டி இருக்கும் என எச்சரிக்கை செய்தார் எனவும், இதனால் பி.டி.ராஜனும் அண்ணாவும் ஓடி விட்டனர் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் முத்துராமலிங்க தேவர் அவ்வாறு கூறவில்லை என பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. பாஜ தலைவர் அண்ணாமலை இவ்வாறு கட்டு கதைகளை கூறி மக்களிடம் கலவரம், மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார்.

எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் யுவராஜ், அண்ணாமலை மீது இரண்டு சமுதாயத்திற்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அரசின் அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் சேலம் சமூக ஆர்வலர் பியூஸ் சேலம் நீதிமன்றத்தில் அளித்த புகாரின்பேரில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர, அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி வழங்கியுள்ளார். இதன் நகல் சேலம் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அதன்பின்னர் அண்ணாமலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சேலம் சமூக ஆர்வலர் புகார்: பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Salem ,Bahia ,Annamalai ,PAJA ,PEUZ BUKHARINBER ,Poose ,JM-4 court ,Tamil Nadu ,Bajaj ,state ,president ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பேச்சு விவகாரம்; அண்ணாமலை மீது மேலும் ஒரு வழக்கு!