×

பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் சாவு

திட்டக்குடி: புதுவைக்கு சுற்றுலா சென்றபோது கார் கவிழ்ந்து சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகா ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி ரேகா (36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது தோழி தஞ்சாவூரை சேர்ந்த மூமன் சங்கீத் மனைவி டெல்பின் தெரசா (22), அவரது இரண்டரை வயது மகள் மற்றும் ரேகாவின் அக்கா இந்துமதி (36), அவரது மகள் மகாலட்சுமி (14), ரேகாவின் மகள்கள் நந்தனா (13), மிருதுளா (8) ஆகியோர் ஒரு காரில் புதுச்சேரிக்கு சுற்றுலா செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். காரை புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார்(40) என்பவர் ஓட்டி வந்தார்.

கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்த எழுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு கார் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இந்துமதி மற்றும் ரேகாவின் மகள் நந்தனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற 6 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டிரைவர் பிரவீன்குமார் இறந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Thitakkudi ,Puduvai ,Rajmohan ,Rekha ,Reddipalayam ,Vallam taluka ,Thanjavur district ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது விபத்தில் 3 பேர் பலியானது எப்படி?