சென்னை: ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடித்துள்ள படம், ‘திருவின் குரல்’. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். வரும் 14ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அருள்நிதி நிருபர்களிடம் கூறியதாவது: அப்பா பாரதிராஜாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு பணியாற்றும் சிலருக்கும், படத்தில் பேச இயலாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான எனக்கும் நடக்கும் ஈகோ யுத்தம்தான் கதை. இந்த கேரக்டரில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோயின் ஆத்மிகா எனது அத்தை மகளாக நடித்துள்ளார். ‘வம்சம்’, ‘மௌனகுரு’, ‘பிருந்தாவனம்’ ஆகிய படங்களின் வரிசையில், எனது நடிப்புத்திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் படம் என்பதால், ரசிகர்களின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
எத்தனையோ படங்களில் நடித்தாலும், சில படங்கள் மட்டுமே மனதுக்கு நெருக்கமாக இருக்கும். எனக்கு அதுபோன்ற ஒரு படம், ‘திருவின் குரல்’. சாதாரண மக்கள் மருத்துவமனை சென்றால் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இயல்பாக சொன்ன இயக்குனர் ஹரிஷ் பிரபு, கண்டிப்பாக திரையுலகில் முன்னணி இடத்துக்கு வருவார். வரும் 14ம் தேதி ‘திருவின் குரல்’ படம் திரைக்கு வருகிறது. அடுத்து ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘டிமான்ட்டி காலனி 2’, ‘அடங்க மறு’ இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் அசோசியேட் விஜய் இயக்கும் படம், இன்னாசி பாண்டியன் இயக்கும் படம் என்று நடிப்பில் பிசியாக இருக்கிறேன்.