×

சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் தப்பினர்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே இன்று காலை தனியார் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 17 பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து பெங்களூர் செல்வதற்காக தனியார் பஸ் இன்று அதிகாலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக சென்று கொண்டிருந்தது. பஸ்சில் ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த 17 பயணிகள் இருந்தனர். திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த காசி (27) என்பவர் பஸ்சை ஓட்டினார்.

அதிகாலை 4 மணி அளவில் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் அத்தியப்பகவுண்டன்புதூர் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் மெஷின் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பஸ்சில் சிக்கிய 17 பயணிகளை பாதுகாப்பாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படாததால், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்து: 17 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Nilgiri district ,Ooty ,Bangalore ,Sathyamangalam, Erode district ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை