×

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்; கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

நீலகிரி: தமிழகத்தில் வெயில் வாட்டி எடுப்பதால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் என வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். இதனால் அங்கு வெளிமாநில, வெளிமாவட்ட வாகனங்கள், நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த கொரோனா காலத்தில் இருந்தது போல் இ பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மே 7ஆம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து இ பாஸ் முறையை கொண்டு வருவதற்கான பணிகளை ஊட்டி, கொடைக்கானல் மாவட்ட நிர்வாகம் எடுத்து வந்தது. இந்த நிலையில்தான் ஊட்டி செல்ல இ பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரியை நீலகிரி ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். epass.tnega.org என்ற இணையதளம் வாயிலாக இ பாஸுக்கு பதிவு செய்யும் நடைமுறை நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதியான கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பலரும் இ-பாஸ் நடைமுறை தெரியாமல், நீலகிரிக்கு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர். நெட்வர்க் பிரச்னை மற்றும் ஒரே நேரத்தில் பலர் இ-பாஸ் பெற முயற்சி செய்வதால் OTP வர தாமதமாகிறது. இ-பாஸ் பெறுவதற்காக பயணிகள் காத்திருக்கும் நிலை இருப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்; கூடலூர் நாடுகாணி சோதனைச் சாவடியில் 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty, Kodaikanal ,Gudalur Nadukani ,Nilgiris ,Tamil Nadu ,Ooty ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED கூடுதல் விலைக்கு மது விற்பனை டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் சஸ்பெண்ட்