×

உலக பத்திரிகை சுதந்திர நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: உலக பத்திரிகை சுதந்திர நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: 1992ல் வின்ட்ஹோக்கில் ஆப்பிரிக்க நாளிதழ் செய்தியாளர்கள் ஒன்றிணைந்து பத்திரிகை சுதந்திரம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் நினைவாக, மே 3ம் நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுப்பேரவை ’உலக பத்திரிகை சுதந்திர நாள்’ ஆக 1993ம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இந்நாள் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வளர்க்க பயன்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுகிறது. 2021ல் திமுக அரசு பொறுப்பேற்ற வேளையில் உலகம் முழுதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக் காலத்தில் தமிழ்நாட்டில் செய்தி சேகரிப்பதில் அச்சமின்றி இரவும் பகலும் பாடுபட்ட செய்தியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து பல்வேறு உதவிகள் அளிக்கப்பட்டன. கொரோனா சிறப்பு ஊக்கத்தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது.

கொரோனா இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கியது. பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 3,223 நபர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு, பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.10,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம் ரூ.5,000ல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்வு, பணிக்காலத்தில் இயற்கை எய்திடும் பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப உதவித்தொகை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு, சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழுடன் கூடிய

‘கலைஞர் எழுதுகோல் விருது’ ஆண்டுதோறும் அறிவிப்பு, கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு பெண்மையை போற்றும் வகையில் சிறப்பினமாக இவ்வாண்டு மட்டும் கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க ஆணை பிறப்பிப்பு, பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்வு, பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் மருத்துவ உதவித்தொகை

ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்வு, பத்திரிகையாளர்களுக்கென சிறப்பு மருத்துவ முகாம்கள் என பத்திரிகையாளர்கள், செய்தி ஊடகவியலாளர்கள் திராவிட மாடல் அரசினால் பாதுகாக்கப்பட்டு போற்றப்படும் வேளையில் கடைபிடிக்கப்படும் உலக பத்திரிகை சுதந்திர நாளில் திராவிட மாடல் அரசின் சார்பில் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உலக பத்திரிகை சுதந்திர நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,World Press Freedom Day ,Chennai ,M.K.Stalin ,Windhoek ,United Nations General Assembly ,
× RELATED கெஜ்ரிவால் சிறையில் இருந்து...