×

இன்றும் பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்கும்: தமிழ்நாட்டில் 2 நாட்களில் கோடை மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கத்தை அடுத்து அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெயில் மற்றும் வெப்பம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புள்ளாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் வேலூர், கரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில், ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் அதிகபட்சமாக 115 டிகிரி வரை வெயில் பதிவாகியுள்ளது. இதுதவிர தெலங்கானா, ஒடிசாவில் 113 டிகிரி, மேற்கு வங்கத்தில் 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதுதவிர தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 20 மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதே நிலை 7ம் தேதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையைப் பொருத்தவரையில் இன்றும் நாளையும் தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் ெ தாடர்ச்சியாக தமிழ்நாட்டில் இன்று(2ம் தேதி) 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும், மேலும், இன்றும் நாளையும் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடுகாரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நாளைமுதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் பெரும்பாலான மாவட்டங்களில் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post இன்றும் பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்கும்: தமிழ்நாட்டில் 2 நாட்களில் கோடை மழை பெய்யும் வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Weil Sadamadi ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...