×

ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசு சிதைத்து விட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி


சென்னை: ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை 10 ஆண்டு கால பாஜ ஆட்சி சிதைத்து விட்டது என்று மே தின நினைவு சின்னத்துக்கு அஞ்சலி செலுத்திய பின் செல்வப்பெருந்தகை கூறினார். மே தினத்தை முன்னிட்டு, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தி­ன பூங்­கா­வில் உள்ள நினை­வுச் சின்­னத்­துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மோடி ஆட்சியில் தொழிலாளர்களின் நலன் புறந்தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 50 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மோடி ஆட்சியில் வெறும் 176 ரூபாய் சம்பளம்தான், இதை வைத்து ஒருவர் எப்படி குடும்பத்தை நடத்த முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அது 400 ரூபாயாக உயர்த்தப்படும்.

தொழிலாளர்களுக்கு வேலை உறுதி செய்யப்படும், தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் உறுதி செய்யப்படும் அவர்களுக்கு உரிய எதிர்காலம் அமைத்து தரப்படும். இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறிய மோடி இருந்த வேலைவாய்ப்பையும் பறித்துக் கொண்டார். சிகாகோவில் நடந்த போராட்டத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. பலரின் ரத்தம் சிந்தலுக்குப் பிறகு தொழிலாளர்கள் உரிமைகள் பெறப்பட்டது. அந்த உரிமைகளை பாஜக 10 ஆண்டு ஆட்சி சிதைத்து விட்டது. இந்தியாவில் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எதற்காக தொழிலாளர்கள் உரிமையை மீட்டெடுக்கப்பட்டதோ, அதற்கு உண்மையான அர்த்தத்தை ஜூன் 4தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி அமல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, சென்னை சத்தியமூர்த்தி பவன் முகப்பில் நீர்மோர் பந்தலை செல்வப்பெருந்தகை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், மோர் வழங்கினார். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர் உரிமைகளை ஒன்றிய பாஜ அரசு சிதைத்து விட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Selvaperunthakai ,CHENNAI ,May Day ,Selvaperunthagai ,BJP ,Chindathiripet, Chennai ,Selvaperundhai ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக...