×

ராஜமங்கலம் பகுதியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது: பழிக்குப்பழியாக நடந்ததாக வாக்குமூலம்

பெரம்பூர்: வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் சரத்குமார் (28), தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜென்டாக வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் சரத்குமார் மீது உள்ளது. நேற்று முன்தினம் மதியம் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் சரத்குமாரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். சுதாரித்துக் கொண்ட சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடிய போது அந்த கும்பல் விடாது துரத்தி சென்று ஓடஓட விரட்டி பட்டாக்கத்தியால் தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினர்.

பிறகு தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து சிதறி ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ராஜமங்கலம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் சரத்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (23), சூளை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (23), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பெஞ்சமின் (23), ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் (22) மற்றும் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2019ம் ஆண்டு பெரவள்ளூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜானகிராமன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கோயிலுக்குள் மது அருந்துவதை தட்டிக் கேட்ட வழக்கில் ஓம் பிரகாஷ், தற்போது கொலை செய்யப்பட்ட சரத்குமார் உள்ளிட்டோர் சேர்ந்து ஜானகிராமனை கொலை செய்தனர். ஜானகிராமனின் உறவினரான நிதிஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து தற்போது சரத்குமாரை கொலையை செய்துள்ளார். தொடர்ந்து சரத்குமார் நிதிஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டி வந்ததாகவும் ஜானகிராமனை கொலை செய்தது போன்று தங்களையும் கொலை செய்து விடுவாரோ என்ற அச்சத்தில் நிதிஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ராஜமங்கலம் பகுதியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது: பழிக்குப்பழியாக நடந்ததாக வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Rajamangalam ,Perambur ,Sarathkumar ,Villivakkam Raja Street ,Villivakkam ,
× RELATED ராஜமங்கலத்தில் பயங்கரம் பட்டப்பகலில்...