×

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோடை காலத்தை எதிர்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பாக வெப்ப அலை தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய கருத்துக்களை கூறினார். அதில் அடுத்த 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம் என அவர் தெரிவித்தார். எனவே இதனை கருத்தில் கொண்டு அனைத்து துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரச்னையை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

குறிப்பாக தமிழகத்தில் 22 மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களில் ரூ.150 கோடி குடிநீர் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனை தவிர்த்து குடிநீர் வாரிய அலுவலர்கள் நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இணைந்து கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தவிர்த்து தமிழகத்தின் சில மாவட்டங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் கூட்டு குடிநீர் திட்டங்களானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இந்த கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம் மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தினார். எனவே அனைத்து கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்குவதில் மின்வாரிய தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறை சூழ்நிலை சந்தித்ததால் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு 2 மாதங்களில் இந்த பற்றாக்குறையில் இருந்து நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

 

The post கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,K. Stalin ,Chennai ,Tamil Nadu government ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...