×

ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் திடீர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: 2 நாள் போக்குவரத்து தடை

திருச்சி. ஏப். 27: திருச்சியின் பெரும்பாலான பகுதிகளில் புதை வடிகால் பணிகள் கடந்த 6 மாத காலமாக நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தோ்தலையொட்டி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் குறுக்கு சாலைகளில் போடப்பட்ட புதைவடிகால்களின் இணைப்புகள் அனைத்தும் பிரதான சாலையில் கொண்டு வந்து இணைக்கப்படுவதால், பெரிய அளவிலான குழாய்கள் சாலையில் ஊடுருவி கொண்டு செல்லப்படுகிறது. அந்த சாலைகளில் போக்குவரத்து சாலைகள் என்பதால் கனரக வாகனங்கள் அதிகம் கடந்து செல்வதால், அவற்றினால் ஏற்படும் அழுத்தம் காரணமாக இந்த குழாய்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து, ஒருசில இடங்களில் இடிபாடுகள் ஏற்பட்டு எதிர்பாராத பள்ளங்கள் ஏற்படுகிறது.

அதேபோல் தான் நேற்று திருச்சி திருவானைகோவிலில் இருந்து ரங்கம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள காந்தி சாலை பகுதியில், அதிகாலை சாலையின் நடுவே திடீரென சிறிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. அடுத்த 4 மணி நேரத்தில் அந்த சிறிய ஓட்டை பெரிய பள்ளமாக மாறியது. இதுக்குறித்து திருச்சி மாநகராட்சி ஊழியரான ராஜா உடனடியாக அப்பகுதியில் பேரிக்கார்டுகளை வைத்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் போக்குவரத்து காவல்துறையினரின் உதவியுடன் அந்த வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகம் கடந்து செல்வதால், முழுமையாக போக்குவரத்தை நிறுத்தினார்கள். மேலும் பொக்லைன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அந்த பள்ளத்தை முழுமையாக தோண்டினார்கள். சுமார் 10 அடி சுற்றளவில், 6 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தபோது, சாலையில் கீழே சென்றுகொண்டிருந்த கழிவுநீர் குழாய் உடைக்கப்பட்டு, கழிவு நீர் வழிந்தோடியபோது சாலையில் மேல் இருந்த மண்ணை அடித்து சென்றதால் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

தற்போது ஊழியர்கள் புதிய குழாய் அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியில் 2 நாட்களுக்கு போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் அதே வழிகளில் உள்ள சாலைகளை ஆங்காங்கே சோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகள் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் திடீர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: 2 நாள் போக்குவரத்து தடை appeared first on Dinakaran.

Tags : Srirangam Gandhi Road ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...