×

₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

சென்னை, ஏப்.26: அண்ணா சாலையின் ₹621 கோடியில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான உயர்மட்ட மேம்பாலம் 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை அண்ணா சாலை, மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. அண்ணா சாலையில் பல்வேறு அரசுத் துறைகளின் தலைமையங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் வர்த்தக மையங்கள், வணிக வளாகங்கள் வங்கித் தலைமையகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்கி வருவதால் இச்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ தூரத்தை கடக்க சராசரியாக 25 முதல் 30 நிமிடங்கள் ஆகின்றது. இப்பகுதிக்குட்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அணிவகுத்து அதிகநேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு ஆகியவற்றில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில்கொண்டு கடந்த 2022-23ம் நிதியாண்டில் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ₹621 கோடியில் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமையும் என அறிவிக்கப்பட்டது.

எனவே, இப்போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை அண்ணா சாலையில், 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான ஆழ்வார்பேட்டை தேனாம்பேட்டை பகுதிகளை பாண்டிபஜார் அண்ணாசலையுடன் இணைக்கும் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தி.நகர் பகுதிகளை இணைக்கும் தியாகராயா சாலை சந்திப்பு, டி.டி.கே சாலையை அண்ணாசாலையுடன் இணைக்கும் எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, சென்னை மாநகரின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான நந்தனம் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் சாலையை இணைக்கும் சிஐடி நகர் 3வது மற்றும் முதல் பிரதான சாலை சந்திப்பு, சைதாப்பேட்டையில் உள்ள தாடண்டர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளை கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ நீளத்திற்கு 14 மீட்டர் அகலம் கொண்ட 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான கட்டுமான பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து தற்போது அண்ணா சாலையில் கட்டுமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அண்ணா சாலையின் மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை செல்வதனால் தூண்கள் வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது, மேலும் பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை எடுக்க முடியாத சூழலும் இருந்தது.

எனவே ஆழம் குறைந்த அடித்தளம் மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பது சாத்தியமற்றது. இதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே தெரிவித்தப்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களை கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை ₹621 கோடியில் மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது. மேலும் இப்பணி ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது. சென்னையின் முக்கியமான திட்டம் என்பதால் 3 ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான பணியானது வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருபகுதியாக ஜே.கே. நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாநில நெடுஞ்சாலைதுறையின் இணைந்து கட்டுமான பணியை மேற்கொள்ள உள்ளனர். அதன்படி மேம்பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள்ள பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

n மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள நேர்பாட்டில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலையாகும்
n உயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தூரத்தை 3 முதல் 5 நிமிடத்திலேயே கடந்து செல்லலாம்.
n கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக அமையும்.
n இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டு தொழில் நுட்ப நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

The post ₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Thenampet ,Saidapet ,Highways ,Chennai ,Anna Road ,Highways Department ,Chennai Anna Road ,Highway Department ,Dinakaran ,
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...