×

நாட்டுக்கோழி பிரியாணி

தேவையானவை:

நாட்டுக்கோழி – அரை கிலோ
சீரகச் சம்பா அரிசி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 2
புதினா – கொத்தமல்லி இலைகள் –
2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – இரண்டரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 5
அன்னாசிப்பூ – 4
பிரியாணி இலை – 4
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – 3 டீஸ்பூன்

செய்முறை:

வெங்காயத்தைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினாவைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கொத்தமல்லித்தழை, புதினா, பெருஞ்சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து நெய், எண்ணெய் சேர்த்து காயவிடவும். காய்ந்த பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும். பிறகு இதனுடன் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு நாட்டுக்கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விடவும். பிரஷர் அடங்கியவுடன் திறந்து, அரிசி சேர்த்து, சரியான அளவு தண்ணீர் (ஒரு கப் அரிசி = ஒன்றரை கப் தண்ணீர்) ஊற்றி மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் மூடியைத் திறந்து மெதுவாகக் கிளறிவிடவும். நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.

The post நாட்டுக்கோழி பிரியாணி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...