×

திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சியில் விபத்து தம்பதி உள்பட 11 பேர் பலி

சென்னை: திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சியில் நடந்த சாலை விபத்துக்களில் தம்பதி உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கோபி (57). இவரது மனைவி விஜயலட்சுமி (51). கோபியின் தம்பி கண்ணன் (47). இவர்கள், சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து நேற்று காலை காரில் புறப்பட்டு சென்றனர். காரை கோபி ஓட்டினார். திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அடுத்த கல்லுப்பட்டி பகுதியில் தனியார் பள்ளி அருகே காலை 10.30 மணியளவில் கார் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கண்ணன், விஜயலட்சுமி, கோபி ஆகியோர் இறந்தார்.

ஈரோடு குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் வடிவேல் (45), சின்ன கவுண்டர் மகன் மோகன்ராஜ் (40), ஜோதி (30), கோபிநாத் மகள் இந்துஜா (17), கோபிநாத் மனைவி அம்பிகாபதி(40), மூர்த்தி மனைவி அனிதா(35) ஆகிய 6 பேரும் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு மீண்டும் காரில் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பொன்னியந்தல் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக காரும், எதிரே வந்த வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இந்த விபத்தில் வடிவேல், மோகன்ராஜ், ஜோதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்துஜா, அம்பிகாபதி, அனிதா மற்றும். வேனில் வந்த திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரஷீத் மகன் ஜலாலுதீன்(30) மற்றும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வேந்தகுடி ஆதிதிராவிட தெருவை சேர்ந்த புஷ்பநாதன் மகன் ஜெகனும் (25). அதே ஊரை சேர்ந்த துரைராஜ் மகன் பாக்கியராஜ் (39) என்பவரும் ஒரே பைக்கில் நேற்று முன்தினம் இரவு வடக்குமாங்குடி சென்று விட்டு தஞ்சாவூர்-விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியதில் ஜெகன், பாக்கியராஜ் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவசண்முகம் என்பவர் ஓட்டி வந்தார்.அப்போது அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் காலை 5.30 மணியளவில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கிருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், காயமடைந்த 25 பயணிகளும் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சாவூர் கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (50) இறந்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பாரதி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தனசேகர்(25) பேக்கரி மாஸ்டர். இவருடன் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி மூல மகன் அஜித்குமார்(25). இருவரும் பைக்கில் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்ய சென்னை நோக்கி சென்றுள்ளனர். வந்தவாசியில் இருந்து கடைசி குளம் கிராம அருகே சென்றபோது எதிரே வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் பலியாகி உள்ளனர்.

The post திருச்சி, தஞ்சை, கள்ளக்குறிச்சியில் விபத்து தம்பதி உள்பட 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Thanjavur ,Kallakurichi ,Chennai ,Gopi ,Venkateswara ,Vijayalakshmi ,Kannan ,Sivakasi ,Tanjore ,
× RELATED ரத்னம் படத்திற்கு தியேட்டர்...