×

மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்

*கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரிக்கை

வருசநாடு : வருசநாடு மூலவைகையாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் கரையோர கிராமங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகையாறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகையாறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும் மூல வைகையாற்றைச் சார்ந்து ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் வாலிப்பாறை, தும்மக்குண்டு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், சிங்கராாஜபுரம், தர்மராஜபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகையாற்றில் கலந்து வருவதால் குடிநீர் மாசடைகிறது. இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே மூல வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,“கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் மட்டும் நிரந்தரமாக குடிநீர் பஞ்சத்தைப் போக்க முடியும். இதற்கு தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் வைகை ஆற்றில் மாசடையும் பகுதிகளில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Moolawaigai ,Varusanadu ,Moolavaigai River ,
× RELATED வருசநாடு வைகை நகரில் பெண்கள் கழிவறை பயன்பாட்டிற்கு வருமா?