×

கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்

*சுட்டெரிக்கும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் சித்ரா பவுர்ணமியொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயர பர்வத மலையில் பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் இங்கு மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சித்தர்கள் இன்றும் காட்சி தரும் பர்வதமலையில் 23 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.

அதன்படி, சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். கலசபாக்கம் அடுத்த கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கடலாடி, பட்டியந்தல், வெள்ளந்தாங்கிஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக கிரிவலம் சென்று மலையேறி தரிசனம் செய்தனர். மலையேறிச் செல்லும்போது செங்குத்தான கடப்பாரை படி, ஏணி படி, ஆகாய படி ஏறிச் செல்லும்போது பக்தர்கள் அரோகரா, அரோகரா என முழக்கமிட்டது விண்ணை பிளந்தது. முன்னதாக பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சக்தி கயிறு கட்டிக்கொண்டு மலையேற தொடங்கினர்.

மலையேறும் பக்தர்களுக்கு வீரபத்திரன் கோயிலில் அன்னதானம் மற்றும் கஞ்சி வழங்கப்பட்டன. மேலும் மலையடி வாரத்தில் பக்தர்களை வனத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர். அதேபோல் கிரிவலப் பாதையிலும் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் போன்றவை வழங்கப்பட்டது. பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. மலை அடிவாரத்தில் இருந்து பாதி மண்டபம் வரை குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குடிநீர் கொண்டு சென்றனர்.

பர்வத மலையின் கிரிவலம் மகிமை

முழு நிலவு ஒளி வீசும் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. சந்திர பகவான் பவுர்ணமி அன்று சூரிய பகவானிடம் அதிக சக்தியை பெற்று உலா வருகிறார். இத்தருணத்தில் வெளிப்படும் முழு நிலவின் தூய கதிர்கள் இம்மலையின் மீது அமைந்துள்ள மூலிகைகள் மற்றும் மூலிகை விருட்சங்கள் ஆகியவற்றின் மீது பட்டு பிரதிபலிக்கும். பிரதிபலிப்பின் போது வெளிப்படும் சக்தி பன் மடங்காக பெருகி நம் உடலுக்கும் நம்மை அறியாமல் நம் மனதிற்கும் பல்வேறு நன்மைகளை உண்டாக்குகிறது. இதனால் பவுர்ணமி கிரிவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது.

சிவபெருமான் நந்தியாகவும் லிங்கமாகவும் திரிசூலமாகவும் மாறி மாறி காட்சியளிக்கும் பர்வத மலையில் இன்றும் சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் சூட்சும வடிவில் கிரிவலம் வருகின்றனர். ஞாயிறு கிரிவலம் வந்தால் கடன் தீரும், திங்கட்கிழமை பதவி கிட்டும், செவ்வாய்க்கிழமை பகைவரை எளிதில் வெல்வர். புதன் இறைவனின் முழு கருணையும், அருட்வாசமும் கிடைக்கும். வியாழன் மிகுந்த சந்தோஷம். வெள்ளி புத்திர பாக்கியம் செல்வம் கிடைக்கும். சனி மூன்று லோகங்களையும் வணங்கக்கூடிய நன்மை ஏற்பட்டு இறைவனிடம் சேர்தல் என்பது ஐதீகம்.

பக்தர்களுக்கு வழிகாட்டும் பைரவர்

4560 அடி உயரமுள்ள பர்வதமலை ஏரி செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான கடப்பாரை படி, ஆகாய படி, ஏணி படி என பல்வேறு படிகளை கடந்து மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான பைரவர் பக்தர்களுக்கு மலையேறிச் செல்ல வழிகாட்டி வருவது வழக்கம். நேற்று சித்ரா பவுர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். அப்போது பாதி மண்டபம் அருகே சிவபெருமான் பைரவ வடிவில் பக்தர்களுக்கு வழிகாட்டி காட்சி தந்தார்.

The post கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Chitra ,Poornami Krivalam ,Parvathamalai ,Kalasapakkam ,Parvatha ,Thiruvannamalai district ,Chitra Poornami Krivalam ,
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?