×

விளம்பரத்துக்காக வழக்கு தாக்கல்… மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

சென்னை: விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். இதனிடையே விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்கள், தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 14ம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளோம். எனவே அவரை தகுதி நீக்கம் செய்யவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்,”இவ்வாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பின் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களே நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,”இவ்வாறு கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

The post விளம்பரத்துக்காக வழக்கு தாக்கல்… மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி! appeared first on Dinakaran.

Tags : Manikam Thakur ,Chennai ,Chennai High Court ,Congress ,Virudhunagar ,Manikam Tagore ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...