×

கேரளாவில் பறவை காய்ச்சல்: களியக்காவிளை சோதனை சாவடியில் கறிக்கோழி வாகனங்களில் கிருமிநாசினி

 

நாகர்கோவில், ஏப்.21: பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் கறிக்கோழி வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா, செறுதலா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பண்ணைகளில் வாத்துகள் திடீரென்று பெருமளவில் உயிரிழந்தன. இறந்த வாத்துகளை பரிசோதனை செய்ததில் எச்5 என் 1 பறவை காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்க களியக்காவிளையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் இருந்து கோழிகள் கொண்டுவரும் வாகனங்கள் திருப்பிவிடப்படுகிறது.தமிழகத்தில் இருந்து கேரளா சென்றுவிட்டு வரும் கோழிப்பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி – கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகள் கூட்டமாக இறந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post கேரளாவில் பறவை காய்ச்சல்: களியக்காவிளை சோதனை சாவடியில் கறிக்கோழி வாகனங்களில் கிருமிநாசினி appeared first on Dinakaran.

Tags : Kalikavila ,Nagercoil ,Kerala ,Kumari district ,Edathua ,Cherutala ,Alappuzha district ,Kaliakavilai ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல்...