×

தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து

 

திருத்தணி, ஏப். 21: திருத்தணி சட்டமன்ற தொகுதியில் அமைதியான முறையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்ப்பட்ட துணை ராணுவ படையினருக்கு போலீசார் சார்பில் பிரியாணி விருந்து வைத்து வழியனுப்பி வைக்கப்பட்டனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் திருத்தணி தொகுதியில் 330 வாக்கு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்புடன் ராணிப்பேட்டையில் உள்ள கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தல் பணிக்கு வந்திருந்த துணை ராணுவ படையினருக்கு போலீசார் சார்பில் திருத்தணி காவல் தங்கும் விடுதியில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் டிஎஸ்பி விஜ்னேஷ், பயிற்சி டிஎஸ்பி தர்ஷிகா பங்கேற்று துணை ராணுவ படை வீரர்களுக்கு பிரியாணி உணவு பரிமாறினர்.  தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்புடன் நடைபெற துணை ராணுவ படையினர் போலீசாருடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டதாக டிஎஸ்பி விக்னேஷ் பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து துணை ராணுவ படையினரை போலீசார் வழியனுப்பி வைத்தனர். இதில் காவல் ஆய்வாளர்கள் மலர், ஞானதி, உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி உள்ளிட்ட போலீசார் பங்கேற்றனர்.

The post தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து appeared first on Dinakaran.

Tags : Thiruthani police party ,Thiruthani ,Tiruthani ,biryani ,Tiruthani police party ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...