நாமக்கல், ஏப்.20: நாமக்கல் நகரில் உள்ள வாக்குச்சாவடிகளில், மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 7.30 மணிக்கு நேரில் சென்று வாக்களித்தார். வாக்குப்பதிவினை தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான உமா நாமக்கல் நகராட்சியில் உள்ள நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி (வடக்கு), ராமாபுரம் புதூர், நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் சின்னமுதலைப்பட்டி, நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து, தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தரும் வாக்காளர்களுக்கு, அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The post வாக்குச்சாவடிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.