×

ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142 வாக்காளர்களுக்காக 12 கி.மீ. தூரம் ஓட்டு மெஷின்களை தலையில் சுமந்து சென்ற அதிகாரிகள்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே போதமலையில் உள்ள 1,142 வாக்காளர்களுக்காக 12 கி.மீ தூரம் தலைசுமையாக வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், மலை கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

போதமலை பகுதியில் கீழூர், மேலூர், கெடமலை என 3 குக்கிராமங்களில் 1,142 வாக்காளர்கள் உள்ளனர். கீழூர் ஊராட்சி பகுதியில், பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியிலும், கெடமலை பகுதியில் பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்க பள்ளியிலும் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போதமலைக்கு நேற்று காலை அனுப்பப்பட்டது.

போதமலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால், போதமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடு முரடான பாதையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் தலை சுமையாக எடுத்துச் சென்றனர். மேலும் வாக்குப்பதிவுக்கு தேவையான இதரப் பொருட்களை மலைவாழ் மக்கள் தலை சுமையாக கொண்டு சென்றனர். அவைகள் நேற்றுமாலை அங்கு பத்திரமாக வைக்கப்பட்டன. இன்று காலை முதல் இங்கு வழக்கம்போல வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் இன்று இரவு இதேபோல தலைசுைமயாகவே அடிவாரத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்படும்.

* இதுவே கடைசி….
கடந்த 50 வருடத்திற்கும் மேலாக அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் மலைவாழ் மக்கள் இவ்வாறு வாக்குப்பதிவு இயந்திரங்களை தலை சுமையாக எடுத்துச் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. போதமலையில் தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சுமார் 31 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணியானது தொடங்கப்பட்டு, இன்னும் ஒரு வருட காலத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் போதமலையில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்களை, இருசக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 10 ஓட்டுக்காக 175 கி.மீ அதிகாரிகள் பயணம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சியில் 1வது வார்டுக்கு உட்பட்ட பகுதி அப்பர் கோதையாறு. இங்கு மின் உற்பத்தி நிலைய ஊழியர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 6 ஆண், 4 பெண் என 10 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்காக அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி திருவட்டார் தாலுகாவுக்கு உட்பட்டது என்பதால் இங்கிருந்து வாக்குப்பதிவு இயந்திரத்துடன் வாக்குப்பதிவுக்கான மண்டல அலுவலர், வாக்குப்பதிவு நடத்தும் அலுவலர், உதவியாளர் 5 பேர், துப்பாக்கி ஏந்திய போலீசார் 3 பேர் என 10 பேர் 2 வாகனங்களில் அப்பர் கோதையாறு பகுதிக்கு புறப்பட்டனர்.

இந்த அப்பர் கோதையாறு மலைப்பகுதிக்கு பேச்சிப்பாறை வழியாக சாலை மார்க்கமாக செல்ல முடியாது. எனவே அதிகாரிகள் நேற்று பகல் 12 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்துடன் குமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் இருந்து நாகர்கோவில், நெல்லை மாவட்டம் பணக்குடி, களக்காடு, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, மாஞ்சோலை வழியாக 175 கி.மீ. பயணித்து அப்பர் கோதையாறு பகுதிக்கு சென்றனர்.

The post ராசிபுரம் போதமலையில் உள்ள 1,142 வாக்காளர்களுக்காக 12 கி.மீ. தூரம் ஓட்டு மெஷின்களை தலையில் சுமந்து சென்ற அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Rasipuram Bodhamalai ,Rasipuram ,Bothamalai ,Tamil Nadu ,
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...