×

களக்காடு பச்சையாறு அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களக்காடு: களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன் பெற்று வருகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. பச்சையாறு அணை கடந்த 2001ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. அப்போது அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. அதன்பின் கடந்த 2009, 2014, 2015, 2019, 2021ம் ஆண்டு மழையின் போது 6 முறை மட்டுமே அணை நிரம்பி ததும்பியது.  அணைக்கு தேங்காய் உருளி அருவி அருகே உள்ள ஊட்டு கால்வாய் மூலமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையில் பெய்யும் தண்ணீரும் அணைக்கு வந்து சேர்கிறது. இதில் தேங்காய் உருளி அருவி ஊட்டுக்கால்வாய் மூலம் தண்ணீர் மூலமே அணை முழு கொள்ளளவை எட்டும் சூழல் உள்ளது. இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த 1 மாதமாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆறு, கால்வாய்களில் வெள்ளம் தணியாமல் ஓடுகிறது. மேலும் 2 முறை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. இந்த வெள்ளத்தால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி ததும்புகின்றன. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளது. ஆனால் பச்சையாறு அணை இன்னும் முழு கொள்ளளவை எட்டாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஊட்டுக் கால்வாயில் இருந்து அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. தற்போது அணை முழு கொள்ளளவான் 50 அடியை எட்டி நிரம்பியது. அணைக்கு வரும் உபரிநீர் ஷட்டர் வழியாக பச்சையாற்றில் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு 200 கன அடி தண்ணீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை பெய்தால் மேலும் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் பச்சையாற்றின் கரையோரமுள்ள மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்….

The post களக்காடு பச்சையாறு அணை நிரம்பியது: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kalakkadu Pachaiyar dam ,Kalakkadu ,Pacchiyar Dam ,Manjuvilai Western Ghats ,Dinakaran ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு...