சென்னை: இன்று தமிழ் புத்தாண்டு முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் இன்று சித்திரை முதல்நாள் பிறப்பை முன்னிட்டு தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் திருத்தணி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்பட அனைத்து பிரசித்திப்பெற்ற கோயில்களிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
நெல்லையில் உள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் அரிய நிகழ்வான சூரிய ஒளி சாமி மீது விழும் காட்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடிவிட்டு தரிசனம் செய்தனர். ராமநாதசாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனர். நாகர்கோயில் ஆதிபராசக்தி பீடத்தில் பாரம்பரிய கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.
இதற்காக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தன . பழனி மலைக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருச்சி உறையூர் காவல் தெய்வமான வெக்காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
The post தமிழ்புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.