×

மத்திய சென்னையில் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் மோடியை ஓடஓட விரட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டிலே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய தொகுதி மத்திய சென்னை தொகுதி. மத்திய சென்னையில் உள்ள 6 தொகுதிகளில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். நீங்கள் ஜெயிக்க வைப்பீங்களா. உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வீடுவீர்களா. நீங்கள் மட்டுமல்ல உங்களுக்கு தெரிந்தவங்க, உறவினர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், இந்த தொகுதியில் இருக்கும் அத்தனை பேரிடமும் இந்த பிரசாரத்தை கொண்டு செல்ல வேண்டும். ஏன் இந்தியா கூட்டணி ஜெயிக்க வேண்டும். ஏன் மோடியை ஓட, ஓட விரட்ட வேண்டும். ஒரு நல்ல பிரதமர் அமைய வேண்டும். அதற்கு 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளில் ஜெயித்தே ஆகணும் என்ற பிரசாரத்தை கொண்டு போய் நீங்கள் சேர்க்க வேண்டும்.

வருகிற 19ம் தேதி வாக்குச்சாவடிக்கு போனீங்க என்றால், முதல் வாக்குப்பெட்டியில் இரண்டாவது இடம் அண்ணன் தயாநிதி மாறன் பெயர் இருக்கும். அதுக்கு பக்கத்தில் நமது வெற்றி சின்னம் உதயசூரியன் இருக்கும். அதில் போடும் ஓட்டு தான், நீங்கள் மோடிக்கு வைக்கிற வேட்டு. மோடிக்கு நாம் வேட்டு வைத்தாக வேண்டும். 19ம் தேதி அண்ணனின் பெயர் வாக்குப்பெட்டியில் 2வது இடத்தில் இருக்கும். ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை. முதல் இடத்துக்கு வரணும். பெரிய வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும். எதிர்த்து போட்டியிடும் யாராக இருந்தாலும் டெபாசிட் இழக்க வேண்டும். அதற்காக பணிகளில் ஈடுபடுவீர்களா.

என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுத்தீர்கள். 3 வருடமாக உங்களோடு பயணித்து இருக்கிறேன். எல்லா சுகம், தூக்க நிகழ்ச்சிகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு என்னென்ன செய்ய முடியுமோ செய்து இருக்கிறேன். இன்னொன்று தமிழ்நாட்டிற்கு எந்த பகுதிக்கு போனாலும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியோட செல்லப்பிள்ளை என்று தான் கூப்பிடுகிறார்கள்.

நான் மட்டுமல்ல, உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியோட செல்லப்பிள்ளை தான். சரியா. இன்னும் நான்கே நாலு தான் நமது கையில் இருக்கிறது. இந்த 4 நாளும் இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில், குறைந்தபட்சம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும். தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செய்து இருக்கிறார். உங்களுக்கு தெரியும். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம், பெட்ரோல், டீசல் விலையை கம்மி பண்ணினாரு. இந்த தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஒரு காஸ் சிலிண்டரை ₹500க்கு தருவேன் என்று சொல்லியிருக்கிறார். வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். செய்வார். பல்வேறு திட்டங்களை முதல்வர் கொடுத்து இருக்கிறார். இன்னும் நிறைய திட்டங்களை செய்யனும் என்றால், வர ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு அளித்து அண்ணன் தயாநிதி மாறனை மிகப்பெரிய வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்கசாலை மகா சக்தி ஓட்டல் அருகில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

The post மத்திய சென்னையில் தயாநிதி மாறனை ஆதரித்து பிரசாரம் மோடியை ஓடஓட விரட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Prasaram Modi ,Central Chennai ,Modi ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Aidanidhi Stalin ,Central Chennai Constituency ,Dayanidhi Maran ,Dimuka ,Dimuka Youth Team ,Udayaniti Stalin ,Chindathripetta ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...