×

பாஜ நடத்திய அனைத்து கூட்டத்தையும் சேர்த்தால் கூட இந்த கூட்டத்தை காட்ட முடியாது; மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியால் கோவை குலுங்கியது

கோவை செட்டிபாளையம் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி எம்.பி., ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி பேசினர். இக்கூட்டத்தில் `வேண்டாம் மோடி’ என்ற கோஷத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது, கூட்டத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் `வேண்டாம் மோடி’ என திருப்பி கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவுக்கு இருந்தது. இக்கூட்டத்தில், எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக காட்சி அளித்தன.

இது, எதிர்கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது. குறிப்பாக, கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ, மேட்டுப்பாளைத்தில் மோடி பொதுக்கூட்டத்தில் சில நூறு பேரே கூடியிருந்தனர். ஆனால், திமுக நடத்திய இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உட்கார இடமில்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுதொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி, கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக பணியாற்றி வரும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:
தமிழ்நாடு முதல்வரின் மூன்று ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஆட்சிக்கு, மக்கள் தந்த பேராதரவு இந்த கூட்டம். ராகுல் காந்தியுடன் இணைந்து, நமது முதல்வர் பங்கேற்ற இக்கூட்டம், நாங்கள் எதிர்பார்த்ததைவிட பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கோவை, இதுவரை கண்டிராத கூட்டம் இது. இந்த பொதுக்கூட்டத்தால் கோவையை குலுங்கியது என்றுதான் சொல்லவேண்டும்.

கடைசிவரை கூட்டம் கலையாமல் அப்படியே இருந்தது. இது, ஒரு தேர்தல் பிரசார கூட்டம் என்று சொல்வதைவிட, அற்புதமான, வெற்றிகரமான, பிரமாண்டமான மாநாடாகவே இருந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி ஆகிய இரண்டு தலைவர்களை ஆதரிக்கும் வகையில் மக்கள் அதிகளவில் கூடினர். இத்தேர்தலில், திமுக கூட்டணிக்கு கிடைக்கப்போகும் மகத்தான, வரலாறு காணாத வெற்றிக்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த கூட்டம் இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கி போல் செயல்படுகிறார்கள். இப்பொதுக்கூட்டத்தில், இருவரின் குரலும் சமூக நீதியை ஒட்டியே ஒலித்தது. இந்தியா கூட்டணி, அன்பின் பக்கம் நிற்கிறது. சகோதரத்துவத்தின் பக்கம் இருக்கிறது. பாஜ கூட்டணியானது, வெறுப்பு அரசியலுக்கு பெயர் போன கூட்டணி. பிரதமர் மோடி, கோவையில் நடத்திய ரோடு ஷோ எந்த அளவு இருந்தது என அதை நேரில் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

பாஜவினர் நடத்திய தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்துக்கும் மக்கள் எந்த அளவில் சென்றார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். தமிழ்நாட்டில், பாஜவினர் இதுவரை நடத்திய மொத்த கூட்டத்தையும் கூட்டினால்கூட, கோவையில் நாம் நடத்திய இத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் `பீட்’ பண்ணிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாஜ நடத்திய அனைத்து கூட்டத்தையும் சேர்த்தால் கூட இந்த கூட்டத்தை காட்ட முடியாது; மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியால் கோவை குலுங்கியது appeared first on Dinakaran.

Tags : BJP ,Coimbatore ,M.K.Stalin ,Rahul Gandhi ,Tamil Nadu ,Chief Minister ,Chettipalayam ,M. K. Stalin ,Vendam Modi ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை