×

முதல்வருக்காக ரோட்டில் தாவி குதித்து சுவீட் வாங்க சென்ற ராகுல்காந்தி; 8 முறை தமிழகம் வந்த மோடியின் முயற்சிகளை மொத்தத்தில் காலி செய்த ஒற்றை வீடியோ: நாடு முழுவதும் வைரலாகி பேசும் பொருளாகிவிட்டது

சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தேர்தலில் பல தேசிய கட்சிகளின் கவனம் தமிழகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது. பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டுக்கு பிரசார சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை உட்பட 8 மாவட்டங்கள் பெருமழையால் மூழ்கி மக்கள் பரிதவித்தபோதெல்லாம் மோடி எட்டி பார்க்காததும், ஒரு பைசா கூட ஒன்றிய பாஜ அரசு உதவி செய்யாததும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் பிரதமருடைய சென்னை ரோடு ஷோ மக்கள் கூட்டம் இல்லாமல் பிசுபிசுத்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும், கோவை பொதுக்கூட்டத்தில் இணைந்து பிரசாரம் செய்தது மக்கள் கவனத்தை ஈர்த்தது. தமிழக வரலாற்றில் பிரசார பொதுக்கூட்டத்தில் இத்தனை லட்சம் மக்கள் இதுவரை வேறு எந்த அரசியல் கட்சிகளுக்கும் கூடியதில்லை என்கிறார்கள். மோடி கலந்து கொண்ட கூட்டத்தை விட 5 மடங்கு அதிகம்.

இந்த நிலையில் கோவை பயணத்தின் போது ராகுல் காந்தி செயலும் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெல்லை பிரசாரம் முடிந்து கோவை விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட ராகுல் காந்தி வழியில் சிங்காநல்லூர் பகுதியில் திடீரென காரை நிறுத்தி இறங்கி சென்டர் மீடியனை தாண்டி குறித்து அருகில் இருந்த இனிப்பு கடைக்குள் சென்றார்.

உரிமையாளர், ஊழியர்களோடு வெகு சகஜமாக பழகிய ராகுல், கடையில் சில இனிப்புகளை வாங்கி ருசி பார்த்தார். பின்பு அங்கிருந்த ஊழியர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். மைசூர்பாகு வாங்கிய அவர் அதற்கு பணம் கொடுத்தார். பின்னர் பொதுக்கூட்ட மேடைக்குச் சென்ற ராகுல் காந்தி தான் வாங்கிய இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து கூறினார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும், ‘எனக்காகவா வாங்கிட்டு வந்தீங்க’ என மகிழ்ச்சியுடன் கூறி பெற்றுக் கொண்டார்.

இந்த வீடியோ தான் இன்று இந்தியா முழுவதும் பெரிய அளவில் வைரலாக பரவி மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கை, ராகுல்காந்தியின் இந்த ஒற்றை வீடியோ காலி செய்து விட்டது என்றே கூறலாம். தமிழர்கள் விருந்தினரை சந்திக்கும்போது இனிப்பு வழங்குவது வழக்கம். தமிழர்களின் பண்பாட்டை மதிப்பது மட்டுமல்ல, அதை கடைபிடிக்கும் தலைவர் ராகுல்காந்தி என்பதை நிரூபித்து விட்டார். இதன் மூலம் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற வடநாட்டு தலைவர்களின் முயற்சியை ராகுல்காந்தியின் ஒற்றை வீடியோ காலி செய்துவிட்டது என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

The post முதல்வருக்காக ரோட்டில் தாவி குதித்து சுவீட் வாங்க சென்ற ராகுல்காந்தி; 8 முறை தமிழகம் வந்த மோடியின் முயற்சிகளை மொத்தத்தில் காலி செய்த ஒற்றை வீடியோ: நாடு முழுவதும் வைரலாகி பேசும் பொருளாகிவிட்டது appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Chief Minister ,Modi ,Tamil Nadu ,Chennai ,
× RELATED சொல்லிட்டாங்க…