×

தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் வெறும் கையை வீசி வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி

சென்னை, ஏப்.14: தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர், வெறும் கையை வீசிக்கொண்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன், என்று மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், அண்ணாநகர் டவர் பூங்கா பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு வாக்கிங் சென்றவர்களிடம் அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பூங்காவிற்கு வந்தவர்கள் தயாநிதி மாறனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பூங்காவிற்கு வந்த ஒருவர் தனது மோட்டார் பைக்கை ஓட்டுமாறு தயாநிதி மாறனிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று மோட்டார் சைக்கிளை தயாநிதி மாறன் ஓட்டினார். இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. பிரசாரத்தின் போது சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, எம்.கே.மோகன் எம்எல்ஏ, பகுதி செயலாளர் பரமசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாக்கு சேகரிப்பின் போது தயாநிதிமாறன் அளித்த பேட்டி: மத்திய சென்னை தொகுதி மக்களை சந்திக்கும் போது அவர்கள் ஆர்வத்துடன், கட்டாயமாக உதயசூரியனுக்கு வாக்களிப்ேபாம் என்ற உறுதியை தருகிறார்கள். இந்த ஆர்வத்தை பார்க்கும் போது மத்திய சென்னையை போல தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. அமித்ஷா, எங்களது 10 ஆண்டு கால ஆட்சியில் நாங்கள் தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை, என்று கூறியிருக்க வேண்டும்.

தேர்தல் வந்ததும் தமிழகத்திற்கு அடிக்கடி மோடி வருகிறார். அமித்ஷா வருகிறார். நிர்மலா சீதாராமன் வருகிறார். தமிழ்நாட்டிற்கு என்ன கொண்டு வந்தீங்க. வெறும் கையை வீசிக்கொண்டு வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தந்த திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்து விட்டோம் என்று சொல்ல முடியுமா. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நாங்கள் நிதி ஒதுக்கி விட்டோம். இன்னும் 6 மாதத்தில் முடியும் என்று சொல்ல முடியுமா. எதையும் செய்யாமல், வெறும் வாயில் வடை சுடுவது தான் பாஜகவினர் வழக்கம். அதற்கு அமித்ஷா விதிவிலக்கு கிடையாது.

தமிழ்நாட்டில் நாங்கள் வரியாக ஒரு ரூபாய் கொடுக்கிறோம். நீங்கள் எங்களுக்கு 29 பைசா திருப்பி தாறீங்க. எங்கள் வரி பணத்தை சுரண்டி தான், உங்கள் உத்தரபிரதேசத்தையும், பீகாரையும், குஜராத்தையும் வாழ வைக்கிறீங்க. தமிழ்நாட்டு மக்கள் வடஇந்திய தலைவர்கள் மீது மரியாதை வைப்பார்கள். நேரு மீது மரியாதை உண்டு. இந்திராகாந்தி மீது மரியாதை உண்டு. ராஜிவ்காந்தி மீது மரியாதை உண்டு. சோனியாகாந்தி மீது மரியாதை உண்டு. மன்மோகன்சிங் மீது மரியாதை உண்டு. ராகுல் காந்தி மீது மரியாதை உண்டு. ஏனென்றால் அவர்கள் தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு சேர்த்தார்கள். ஆனால், ஒன்றும் செய்யாமல், தமிழ்நாட்டில் இருந்து எவ்வளவு வாரிக்கொண்டு போகலாம் என்பதை மட்டும் பார்த்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

ஆரம்பத்தில் பாஜவுடன் பெரிய கூட்டணி வைத்து இருந்தார்கள். அது யார் என்றால் ஈடி, சிபிஐ, ஐ.டி போன்றவை தான். தற்போது தேர்தல் ஆணையத்தையும் கூட சேர்த்து கொண்டுள்ளனர். குஜராத்தில் உள்கட்டமைப்பு சரியில்லை. இந்தியாவில் தலைசிறந்த உட்கட்டமைப்பு எங்கே இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் அது தமிழ்நாடு தான். விமான நிலையங்கள், துறைமுகங்கள், அதுமட்டுமல்லாமல் படித்த மக்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் நோக்கியா, சாம்சங், போர்டு, ஹூண்டாய் போன்ற கம்பெனிகள் வருகின்றன. தமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு அவ்வளவு சிறப்பாக உள்ளது. குஜராத்திற்கு மிரட்டி, மிரட்டி கூப்பிட்டுக்கொண்டு போகிறார்கள். முடியாது என்றால் பிரதமர் கோபித்து கொள்வார் என்கிறார்கள். குஜராத் மாடல் என்றால் தானாக போக வேண்டும். உ.பி மாடல் என்கிறார்கள், அங்கு முதலீடுகள் தானாக போகவேண்டுமே. இல்லையே. அந்த மாடல் தோல்வி. எங்கெல்லாம் பாஜ ஆளுகிறதோ, அங்கு எல்லாம் தோல்வி மாடல்தான். நிர்மலா சீதாராமன் பேச்சில் நேர்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டிற்கு மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் வெறும் கையை வீசி வருவதால் எங்கள் மக்களுக்கு என்ன பயன்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,Nirmala Sitharaman ,Tamil Nadu ,Central ,Chennai ,DMK ,Dayanidhi Maran ,Dayanithi Maran ,Madhya Chennai Parliamentary Constituency ,Dinakaran ,
× RELATED அமித் ஷா பேச்சு பற்றி போலி வீடியோ...