×

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு ஓராண்டு சிறையுடன் ₹20 ஆயிரம் அபராதம் : செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு

செங்கல்பட்டு, ஏப். 14: திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே லஞ்சம் வாங்கிய தற்காலிக இளநிலை உதவியாளருக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் ₹20 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் தனது மகனுக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த விநாயகம் என்பவரை அணுகினார். அப்போது விநாயகம் பிழையை திருத்துவதற்கு ₹300 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பன்னீர்செல்வம் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், 2010ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி ரசாயனம் தடிவிய ரூபாய் நோட்டுகளை பன்னீர்செல்வத்திடம் கொடுத்து விநாயகத்திடம் வழங்குமாறு கூறி அனுப்பினர்.

அதைத்தொடர்ந்து, பன்னீர் செல்வத்திடம் லஞ்சப் பணம் ₹300 வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் விநாயகத்தை கையும், களவுமாக கைது செய்தனர். இதையடுத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டனர். அதில், விநாயகம் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து தற்காலிக இளநிலை உதவியாளர் விநாயகத்தை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெய, குற்றவாளி விநாயகத்திற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளருக்கு ஓராண்டு சிறையுடன் ₹20 ஆயிரம் அபராதம் : செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Seiyar ,Tiruvannamalai district ,Chengalpattu ,Chengalpattu court ,Chittathur Village ,Seyyar Taluk, Tiruvannamalai District ,Seyyar, Tiruvannamalai District ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...