×

ராகுல் ரொம்ப சிம்பிள்… பந்தாவே இல்ல… கோவை ஸ்வீட் கடை ஊழியர்கள் நெகிழ்ச்சி

கோவைக்கு நேற்று முன்தினம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த ராகுல்காந்தி, சிங்காநல்லூர் பஸ் நிலையம் எதிரே வந்தபோது தனது காரை நிறுத்தி டிவைடரை தாண்டி அங்குள்ள ஒரு ஸ்வீட் கடைக்கு திடீரென சென்றார். அங்கு இனிப்பு வகைகள் வாங்கினார். இதைப்பார்த்து, அங்குள்ள ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ராகுல்காந்தி வருகை பற்றி கடை ஊழியர் பாபு கூறுகையில்,“எங்களது கடைக்கு ராகுல்காந்தி இப்படி திடீரென வருவார் என நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சில இனிப்பு வகைகள் வாங்கி, ருசித்து பார்த்தார். வாங்க, வணக்கம்… என தமிழில் அழகாக பேசினார். ஒரு கிலோ இனிப்பு வாங்கிச்சென்றார். அவரது வருகை, எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக போச்சு. எந்த பந்தாவும் இல்லாமல், சிம்பிளாக இருக்கிறார். அவரை கண்டதில் ரொம்ப சந்தோஷம்’’ என்றார்.

பிரியா என்கிற ஊழியர் கூறுகையில்,“எங்கள் கடை வழியாக சிறிது நேரத்துக்கு முன்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் சென்றது. அடுத்த பத்து நிமிடத்தில், ராகுல்காந்தி காரும் அந்த வழியாக வந்தது. அவர், திடீரென காரை விட்டு இறங்கி, சாலையின் நடுவே வைத்திருந்த டிவைடரை தாண்டி, எங்களது கடைக்குள் வந்தார். ரொம்ப மகிழ்ச்சி. மக்களோடு மக்களாக பழகினார். கோதுமை அல்வா கொடுத்தோம். அதை ருசி பார்த்துவிட்டு ரொம்ப நல்லா இருக்கு என்றார். ரொம்ப எளிமையாக பழகினார். இப்படி ஒரு அரசியல் தலைவரை நாங்கள் பார்த்ததே இல்லை. ஸ்வீட் ஒரு கிலோ மிக்ஸ் பன்னி வாங்கிச்சென்றார். அதற்கான கட்டணத்தை அவரே கொடுத்தார். எங்கள் தோளில் கைபோட்டு செல்பி எடுத்தார். எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி’’ என்றார்

* ராதிகா ‘ஆக்டிங்’காய்ச்சி எடுத்த சிவகாசி மக்கள்
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ சார்பில் ராதிகா போட்டியிடுகிறார். அருப்புக்கோட்டையில் நேற்று அவர் வாக்கு சேகரித்து பொதுமக்களிடம் பேசுகையில், ‘வாக்கு சேகரிப்பின் போது என்னிடம் பொதுமக்கள் விலைவாசி உயர்வு, தங்கம் விலை உயர்வு பற்றி கேட்கின்றனர். தங்கம் விலை உயர்வுக்கும், எனக்கும் சம்பந்தமும் கிடையாது. நீங்கள் என்னை ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்தால், நான் பாலமாக இருப்பேன், உங்களுக்காக செருப்பாக வேலை செய்வேன். எல்லாரும் சொல்லுவாங்க மிரட்டினால் பயந்துகிட்டு ஓட்டு போடுவாங்கனு. அப்படியென்றால் எனக்கும் மிரட்டவும், உருட்டவும் தெரியும். அதெல்லாம் பார்த்துவிட்டு தான் நான் இங்கு வந்துள்ளேன்’ என்றார்.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரம் முக்கு சந்திப்பில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் ராதிகா, சரத்குமார் பேசும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் சிக்கி தவித்தது. இதனால், அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த மக்கள், ‘‘தாய் மாதிரி, சகோதரி மாதிரின்னு சொல்லுறீங்களே… முதல்ல ஆம்புலன்சுக்கு வழி விடுங்க..’’ என காய்ச்சி எடுத்தனர்.

The post ராகுல் ரொம்ப சிம்பிள்… பந்தாவே இல்ல… கோவை ஸ்வீட் கடை ஊழியர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Coimbatore sweet shop ,Rahul Gandhi ,Coimbatore ,Singhanallur ,station ,Coimbatore sweet ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...