விருத்தாசலம், ஏப். 13: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி வெண்ணிலா. இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்துள்ளார். நேற்று வெண்ணிலா மெடிக்கலில் இருந்த போது மருந்து வாங்குவதற்காக பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மருந்து மாத்திரைகள் கேட்டுள்ளனர். அப்போது வெண்ணிலா மருந்து மாத்திரைகளை எடுத்து கொடுக்க முயற்சித்த போது திடீரென அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா கத்தி கூச்சல் போட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயற்சித்தும் முடியவில்லை.
இது குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் இருவரும் தலையில் ஹெல்மெட் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்ததாகவும், முதலில் மெடிக்கலில் வந்து தெரியாத ஒரு விலாசத்தை கொடுத்து விவரம் கேட்டதாகவும், அதற்கு வெண்ணிலா தெரியாது என்று கூறியதாகவும், அப்போது மெடிக்கலில் யாரும் இல்லாமல் வெண்ணிலா மட்டும் இருந்ததை அறிந்து கொண்டு பின்னர் சற்று தூரம் சென்று விட்டு திரும்ப வந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் வெண்ணிலா தெரிவித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.