×

மதுரவாயல் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி வாட்ஸ்அப்பிலிருந்து பாஜவுக்கு வாக்கு அளிக்க கோரி பூத் சிலிப்: ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார்

சென்னை: மதுரவாயல் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி வாட்ஸ்அப் எண்ணில் இருந்து பூத் சிலிப்பில் பாஜ சின்னத்துடன் பாஜவுக்கு வாக்களியுங்கள் என வாசகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கட்சியின் 2ம் நிலை வாக்குச்சாவடி முகவருக்கு மதுரவாயல் தொகுதியின் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி பிரியா என்பவர் ஒரு வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பி இருந்தார். அதில் ஒரு இணையதளத்தின் இணைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் சென்று பார்க்கும் போது ஓடிபி கேட்கப்பட்டது.

பின்னர் வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்த பின் ஒரு பூத் சிலிப் காணப்பட்டது. அதில் பாஜவுக்கு வாக்களியுங்கள் என்று அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் படம் காணப்படுகிறது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். பூத் சிலிப்கள் மற்றும் வாக்காளர் தகவல் சிலிப்புகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. அதில் வாக்காளர் தகவல் சீட்டுகளை அரசியல் கட்சியினர் வழங்கும் போது வாக்காளரின் பெயர், வரிசை எண், அவர் வாக்களிக்கும் இடம் போன்றவை மட்டும் தான் இடம் பெற்றிருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பெயர் இடம் பெறக்கூடாது என்று அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற புகார் ஒன்றை ஏற்கனவே கடந்த 10ம் தேதி திமுக அளித்துள்ளது. அந்த புகாரில் கோவையில் வழங்கப்படும் பூத் சிலிப்புகளில் பாஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் படம் இடம் பெற்றிருந்ததாக கூறியிருந்தோம். பாஜ மத்தியில் ஆட்சி செய்வதால், தேர்தல் கமிஷனின் அதிகாரிகளை அக்கட்சி தவறாக பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. இதுபோன்ற நிலை தொடர்ந்தால் பாஜவுக்கு இதேபோன்று அனுமதி வழங்கப்பட்டால், ஜனநாயகத்துக்கோ அல்லது நேர்மையான தேர்தலுக்கோ அது வழிவகுக்காது.

எனவே உடனடியாக தலையிட வேண்டும். நாங்கள் குறிப்பிட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை தேர்தல் பணியில் இருந்து நீக்க வேண்டும். பாஜ இதுபோன்ற பூத் சிலிப்புகளை வழங்கக் கூடாது என்று தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பாஜ மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பணியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பாஜவுக்கு உதவக் கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

The post மதுரவாயல் வாக்குச்சாவடி நிலைய அதிகாரி வாட்ஸ்அப்பிலிருந்து பாஜவுக்கு வாக்கு அளிக்க கோரி பூத் சிலிப்: ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Maduravayal Polling Station ,Officer ,Bhooth Silip ,BJP ,WhatsApp ,RS Bharati Election Commission ,CHENNAI ,Maduravayal ,DMK Organization ,RS Bharti ,station ,RS ,Bharti ,Election Commission ,Booth ,Silip ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...