×

சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு தொடர்பாக வருவாய்த்துறைக்கு கடிதம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி இரண்டாக பிரிக்கப்பட்டு, அதே பெயரில் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் கிராமத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் கிராமத்திலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இருந்து சட்டக் கல்லூரியை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, சென்னை நகருக்குள் அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக வருவாய் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டக்கல்லூரி அமைக்க குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதிகள், மீண்டும் மோதல் நடப்பதை விரும்பவில்லை. சென்னை நகருக்குள் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான நிலத்தை கண்டறிந்து தெரிவிப்பதற்காக ஜூன் 24ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம் தேர்வு தொடர்பாக வருவாய்த்துறைக்கு கடிதம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Revenue Department ,Chennai ,Tamil Nadu government ,High Court ,Court ,Dr. Ambedkar Government Law College ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...