×

88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ம் தேதி (நேற்று) தொடங்கும் என்று தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 88 இடங்களில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் விடைத்தாள் திருத்தும் பணி நேற்று தொடங்கியது. முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்கி வைத்தனர்.

இன்று உதவித் தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்துவார்கள். பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த தொடங்குவார்கள். 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டியுள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணியை விரைவாக நடத்தி 22ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த பணியில் சுமார் 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடக்கும். அதன் தொடர்ச்சியாக மே 10ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

The post 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...