×

மீனவர்களை கண்டுகொள்ளாத பாஜ ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது: குமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பாசிச பாஜ ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து தக்கலை தாலுகா அலுவலகம் அருகில் அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நீங்கள் போடும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு வைக்கும் வேட்டு. மோடி மட்டும் நமக்கு வேட்டு வைத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கும் நாம் யார் என்பதை காட்ட வேண்டும். சுயமரியாதை மக்கள் என்று காட்ட வேண்டும். சசிகலா காலைபிடித்து முதல்வர் ஆகி, பின்னர் அவரது காலை வாரிவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. நமது முதலமைச்சர் அவருக்கு பெயரே வைத்துவிட்டார். அவர் எடப்பாடி பழனிசாமி கிடையாது, பாதம் தாங்கி பழனிசாமி. அவர் நமது மாநில உரிமைகளை விட்டு கொடுத்து பாஜவுக்கு 4 வருடம் அடிமையாக இருந்து தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை விட்டு கொடுத்துள்ளார். மாநில உரிமைகளை மீட்பதே இந்த பிரசாரத்தின் நோக்கம்.

எதிர்தரப்பில் 10 வருஷம் ஒரு மனுஷன் இந்தியாவை ஆண்டுள்ளார். அவரது பெயரை மாற்றிவிட்டேன், பிரதமரை இனி ‘மிஸ்டர் 29 பைசா’ என்று கூப்பிடுங்கள். காரணம் இல்லாமல் நான் இதனை சொல்லவில்லை. ஏன் என்றால் நாம் ஜிஎஸ்டி வரி கட்டுகிறோம். தமிழ்நாட்டில் ஒவ்வொருத்தரும் கட்டும் ஒரு ரூபாய்க்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்றிய அரசு வெறும் 29 பைசாதான் தருகிறது. தமிழ்நாட்டுக்கு நிதி உரிமை, மொழி உரிமை, கல்வி உரிமை தரும், மக்களை மதிக்கும் பிரதமர் அமைய இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். மோடிக்கு சவால் விடுகிறேன், இதுவரை ஒரு பொதுத்துறை உருவாக்கினீர்களா. எல்லாவற்றையும் தனியாரிடமும் அதானியிடம் தூக்கி கொடுத்துவீட்டீர்கள், உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 2ம் இடம்.

ஒக்கி புயல் பாதிப்பு உங்களுக்கு தெரியும். 2017 நவம்பரில் கன்னியாகுமரியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசும், அடிமை அதிமுக அரசும் முன்னெச்சரிக்கை வெளியிடவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இறந்தனர், காணாமல் போயினர். அப்போதை அரசு ஏதும் செய்யவில்லை. நமது தலைவர் வந்து பார்த்தார், ராகுல்காந்தி வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். மோடி வந்து பார்த்தார். ஹெலிகாப்டர் பக்கத்தில் நின்று பார்த்து போட்டோ எடுத்துவிட்டு போய்விட்டார். இப்படிப்பட்ட கேவலமான பாசிச பாஜக ஆட்சி தேவையா? பாசிச பாஜ ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது. தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாக கேட்கிறேன், ஆதரியுங்கள் கை சின்னம். இவ்வாறு அவர் பேசினார்.

The post மீனவர்களை கண்டுகொள்ளாத பாஜ ஆட்சியை அகற்றும் நேரம் வந்துவிட்டது: குமரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister Assistant Secretary ,Stalin ,Kumari ,Bajaj ,Kanyakumari ,Lok Sabha Constituency Congress ,Vijay Vasant ,Vlawangodu ,Assembly Constituency Congress ,Taragai Kathbert ,Talakala Taluga ,Deputy Minister ,Udayaniti Stalin ,
× RELATED மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில்...