×

மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் பைனல் மே 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் நேற்று முன்தினம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடிய ஈஸ்ட் பெங்கால் அணி 1-4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியிடம் தோற்றது. அதனால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெங்கால் அணி இழந்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தை உறுதி செய்த சென்னையின் எப்சி (21 போட்டி, 27 புள்ளி) நாக் அவுட் சுற்று வாய்ப்பை வசப்படுத்தியது.

மும்பை (21 போட்டி, 47 புள்ளி), மோகன் பகான் (20 போட்டி, 42 புள்ளி), கோவா (21/42), ஒடிஷா(21/39), கேரளா(21/20) அணிகள் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டங்கள் விளையாட வேண்டிய நிலையில் எஞ்சிய ஆட்டங்கள் அணிகளின் தரவரிசையை உறுதி செய்யும். லீக் சுற்று ஏப்.15ல் முடிகிறது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். 3-6வது இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி எஞ்சிய 2 அரையிறுதி இடங்களை பிடிக்கும்.

இந்நிலையில் நாக் அவுட் சுற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 3-6, 4-5 மோதும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஏப்.19, 20 தேதிகளில் நடக்கும். முதல் கட்ட அரையிறுதி ஆட்டங்கள் ஏப்.23,24, 2வது கட்டம் ஏப்.28,29 தேதிகளிலும். இறுதிப் போட்டி மே 4ம் தேதியும் நடைபெறும்.

The post மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை appeared first on Dinakaran.

Tags : ISL Final ,Chennai ,Indian Super League ,ISL ,East Bengal ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...