×

‘நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்’ மே.வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சியை ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஏற்க மாட்டோம் என முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியுடன் தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி கொல்கத்தாவில் ஒரு மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, “எனக்கு யாரையும் வெறுக்க தெரியாது. வெறுக்கத்தக்க பேச்சுகளை நான் பேசுவதில்லை. அனைவரும் சகோதரர்களை போல ஒற்றுமையுடன், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என நான் விரும்புகிறேன். மதத்தின் பெயரால் கலவரத்தை தூண்ட சிலர் இருப்பார்கள். அவர்கள் வெற்றி பெற விட மாட்டோம்.

தேர்தல் நெருங்கும்போது சில குறிப்பிட்ட இஸ்லாமிய தலைவர்களை அழைத்து பேசி, உங்களுக்கு என்ன வேண்டும் என பாஜ கேட்கிறது. நான் பாஜவுக்கு சொல்வது, நீங்கள் அழைத்து பேசும் மக்களுக்கு எதுவும் வேண்டாம். அன்பு ஒன்று மட்டும் போதும். நாம் ஒற்றுமையாக இருந்தால் யாரும் நமக்கு தீமை செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும்வரை யாரும் உங்களுக்கு தீமை செய்ய விட மாட்டேன். நான் அவர்களுடன் சண்டையிடுவேன். நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார். ஆனால் நாட்டின் பெயரில் மக்கள் சித்ரவதை செய்வதை பொறுத்து கொள்ள முடியாது” என்று ஆவேசமாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினரை பாஜ மிரட்டுகிறது
தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, “தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிபிஐ, ஈடி, ஐடி, என்ஐஏ போன்ற ஒன்றிய அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சியினரை பாஜ மிரட்டுகிறது. நீங்கள்(பாஜ) புதிதாக சிறைகளை கட்டி அனைவரையும் சிறையில் அடையுங்கள். ஆனால் 140 கோடி மக்களையும் சிறையில் அடைக்க உங்களால்(பாஜ) முடியுமா?” என்று காட்டமாக கூறினார்.

The post ‘நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்’ மே.வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சியை ஏற்க மாட்டோம்: மம்தா பானர்ஜி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : NRC ,Bengal ,Mamta Banerjee ,Kolkata ,Chief Minister ,Ramadan ,Mamata ,CAA ,
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...