×

தமிழகத்தில் உச்சம் தொட்ட தேர்தல் ஜூரம் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரசாரம்: நெல்லை, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் உச்சம் தொட்டுள்ள நிலையில், இன்று ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இதுவரை தமிழகத்துக்கு 7 முறை வந்து சென்று விட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் இன்னும் பிரசாரத்தை தொடங்காத நிலையில், அடுத்தடுத்து தமிழகத்தில் பிரசார சுற்றுப்பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ராகுல்காந்தி இன்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். நெல்லை, கோவை ஆகிய இடங்களில் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இன்று திருநெல்வேலி உள்பட தென் தமிழக பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மாலை 4 மணி அளவில் பேசுகிறார். பிரசாரத்தில் பங்கேற்கும் ராகுல்காந்தி இன்று பிற்பகலில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பாளையங்ேகாட்டை தூய யோவான் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்குகிறார். பிறகு திறந்த வாகனத்தில் செல்லும் ராகுல் காந்தி ரோடு-ஷோ செல்கிறார். அப்போது அவரை பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்கும் போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க வழியில் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உள்ளிட்டவர்களை ஆதரித்து ராகுல் காந்தி ஆதரவு திரட்டுகிறார். அவர் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்பு, ஹெலிகாப்டர் மூலம் ராகுல்காந்தி கோவை புறப்பட்டு செல்கிறார். கோவை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, செட்டிபாளையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பது இந்தியா கூட்டணி கட்சியினரிடையே புது உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர். கூட்டம் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடக்கிறது.

ராகுல்காந்தி பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு கோவை மற்றும் நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை மற்றும் ஏற்பாடுகளை, தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பாஜ சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக தமிழகம் வரும் நிலையில், காங்கிரஸ் சார்பில் முதன்முறையாக ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பது தேர்தலில் பரபரப்பை அதிகரித்துள்ளது. ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பிரியங்கா காந்தி திருச்சி, கரூர் மற்றும் சிவகங்கைக்கு வருகிறார். அவரை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடலூரில் பிரசாரம் செய்கிறார். இவர்களின் சுற்றுப்பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று காங்கிரசார் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய இருப்பது இந்தியா கூட்டணி கட்சியினரிடையே புது உற்சாகத்தை கொடுத்துள்ளது

The post தமிழகத்தில் உச்சம் தொட்ட தேர்தல் ஜூரம் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் இன்று ஒரே மேடையில் பிரசாரம்: நெல்லை, கோவையில் ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Rahul Gandhi ,M.K. Stalin ,Nellai, Coimbatore ,Chennai ,Coimbatore ,Chief Minister ,M.K.Stalin. ,Congress party ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...