×

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்: அரசு வரவேற்பு

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர். தமிழகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர், கடந்த மார்ச் 16ம் தேதி 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனர். அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள், மீன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம்
எழுதினார். இதையடுத்து இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இலங்கை நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கைது செய்யப்பட்ட மீனவர்களில் 19 பேரை விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இருவருக்கும் தலா 6 மாதம் தண்டனை விதித்து சிறைக்கு அனுப்பினர். இதையடுத்து விடுவிக்கப்பட்ட 19 மீனவர்களையும் தமிழ்நாட்டுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மீனவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால், அவர்களுக்கு எமர்ஜென்சி சர்டிபிகேட் மற்றும் விமான டிக்கெட்டுகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தனர். இதையடுத்து மீனவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்: அரசு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lanka ,Chennai ,Rameswaram ,Sri Lankan Navy ,Nadu ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...