×

ஏற்கனவே ரத்தான நிலையில் அமித்ஷா தமிழகத்துக்கு நாளை மீண்டும் வருகை

சென்னை: அமித்ஷா வருகை ஏற்கனவே ரத்தான நிலையில் நாளை தமிழகம் வருகிறார். அமித்ஷா, கடந்த வாரம் 4ம் தேதியே தமிழகம் வர திட்டமிட்டிருந்தார். ஆனால், உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அங்கு பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. குஜராத்திலும் ராஜபுத்திரர்களுக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் பேசியதால் போராட்டம் நக்கிறது. இதனால் அவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அமித்ஷா மீண்டும் நாளை தமிழகம் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவர் 2 நாட்கள் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஜ அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மதியம் 3.05 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் அவர், 3.50 மணிக்கு சிவகங்கையில் நடைபெறும் வாகன பேரணியில் பாஜ வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து 2 கி.மீ தூரம் பிரசாரம் மேற்கொள்கிறார். இது மாலை 4.50க்கு முடிகிறது. இதன்பின் மாலை 6 மணிக்கு மதுரையில் ரோடு ஷோ மூலம் பாஜ வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். அது மாலை 7. 15 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின் இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குறார்.

மறுநாள் காலை 8 மணிக்கு கிளம்பி காலை 9.15க்கு திருவனந்தபுரம் சென்று, ஹெலிகாப்டர் மூலம் தக்கலை வந்தடைகிறார். அங்கு காரில் காலை 9.45 மணிக்கு பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இது காலை 10.50க்கு முடிகிறது. அதன்பின் விமானம் மூலம் திருச்சி வந்து மதியம் 12.20 மணிக்கு நட்சத்திர விடுதியில் மதிய உணவு முடித்து, 3 மணிக்கு நாகை பாஜ வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு தென்காசி பாஜ வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு பிரசாரம் செய்கிறார். இரவு 8.20 க்கு டெல்லி செல்கிறார். மோடி வாகன பேரணியில் கூட்டம் சேராததால், இந்த பேரணியில் அதிகஆட்களை திரட்ட பாஜவினர் முயற்சி செய்கின்றனர்.

The post ஏற்கனவே ரத்தான நிலையில் அமித்ஷா தமிழகத்துக்கு நாளை மீண்டும் வருகை appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Tamil Nadu ,Chennai ,Uttar Pradesh ,BJP ,Gujarat ,Rajputra ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...