×

அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து வரும் இசுலாமிய தோழர்களின் நலன் காக்கும் அரசாக திகழும் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

சென்னை: அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து வரும் இசுலாமிய தோழர்களின் நலன் காக்கும் அரசாக திமுக திகழ்வதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ரமலான் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது: நோன்புக் கடமைகளை முடித்து, ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துகள். மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும்.

இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம். அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாக கழக அரசு திகழ்ந்து வருகிறது. கடந்த 2007ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளை செய்த தலைவர் கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, இனி ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன், இசுலாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை என எண்ணற்ற அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான Pre -matric scholarship, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம். அதேபோல், இசுலாமியரை பாகுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமிய தோழர்கள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அண்ணல் நபிகளின் வழியில் வாழ்ந்து வரும் இசுலாமிய தோழர்களின் நலன் காக்கும் அரசாக திகழும் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin ,Ramadan ,Chennai ,President ,Ramadhan ,Prophet ,Annal ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...