×

தென்சென்னை தொகுதியில் தாமரையை மலரச் செய்வேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் தொகுதி முழுவதும் தாமரை சின்னத்துக்க ஆதரவு கேட்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு, அவர்களுடன் பழகி வருகிறார். எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் என்று பாசத்தோடு அவர் பேசுவது தொகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதோடு, பல இடங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதோடு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தி மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவரை அன்போடு வரவேற்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனால் தொகுதி முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பை தொகுதி மக்கள் அளித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை சோழிங்க நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நைனார் குப்பம் மீனவர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு மீனவர்களின் பிரச்னைகளை கேட்டு அவற்றை முழுமையாக செய்து தருவேன் என்று உறுதி அளித்தார். அதை தொடர்ந்து சந்தோஷ்புரம், கலைஞர் தெரு, ரங்கராஜபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளி ஆட்டோவில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது, தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தரும். ‘ரோடு ஷோ’ நன்றாக இருந்தது என்று பிரதமர் மோடி சொன்னார். தொண்டர்களுக்கு பிரதமரின் வருகை உற்சாகத்தை தந்திருக்கிறது. நான் மக்கள் பணி செய்வதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதை சிலர் விமர்சனம் செய்கின்றனர். விமர்சனங்கள் ஒன்றும் தமிழிசைக்கு புதிதல்ல, விமர்சனங்களாலே வளர்ந்தவள் நான், தூசி தட்டி விட்டு தாமரையை மலரச் செய்வேன். பிரதமர் மோடியின் திட்டங்களை பெற்று, நான் இந்த தொகுதியை முன்மாதிரியாக மாற்றி காட்டுவேன்.

தென்சென்னை மக்கள் தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். ஓட்டு வாங்கிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்காக நான் இங்கு வரவில்லை. உங்களை எல்லாம் சேர்த்து ஒரு வளர்ச்சி அடைந்த தென்சென்னையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் வந்துள்ளேன். யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதேபோன்று தான் மீன் பிடித்தாலும் ஆயிரம் பொன். காய்ந்தாலும் ஆயிரம் பொன். மீன் நமக்கு எவ்வளவு பெரிய உதவி செய்கிறது என்றால், கருவாடு ஆன பின்பும் நமக்கு காசு தருகிறது. கருவாடு சந்தை என்பது உலகத்தில் பெரிய சந்தை. ஆனால் அதை நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம். எனக்கு ஒட்டு போட்டு பாருங்கள். இந்த இடத்தை பொருளாதாரத்தில் மேம்படுத்துகிறேனா என்பதை மட்டும் பாருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

The post தென்சென்னை தொகுதியில் தாமரையை மலரச் செய்வேன்: பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : South Chennai ,BJP ,Tamilisai Soundrarajan ,CHENNAI ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...