×

போதை பொருட்கள் கடத்தலில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக், நண்பர்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை

சென்னை: வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்திய விவகாரத்தில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் திரைப்பட இயக்குநர் அமீர், வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் வீடு, ஓட்டல்கள் மற்றும் நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் சர்வதேச நாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு உயர் ரக போதை பொருள் மூலப்பொருட்களை கடத்திய வழக்கில், சென்னை சாந்தோம் பகுதியை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவரை தேசிய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ஜாபர் சாதிக் அளித்த தகவலின் படி, அவரது நெருங்கிய நண்பரான சதா(எ)சதானந்த் என்பவர் கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த மாதம் 18ம் தேதி கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.

அதில் போதை பொருட்கள் விற்பனை செய்த பணத்தை பெரும் அளவில் திரைப்படத்திற்கும், புதிய ஓட்டல்கள் திறந்ததற்கும் முதலீடு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதைதொடர்ந்து ஜாபர் சாதிக் தயாரித்த திரைப்படங்களை இயக்கிய நெருங்கிய நண்பரான திரைப்பட இயக்குநர் அமீர் மற்றும் தொழிலதிபர்களான அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம் ஆகியோருக்கு கடந்த 2ம் தேதி டெல்லியில் உள்ள போதை தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். அதை தொடர்ந்து இயக்குநர் அமீர் கடந்த 2ம் தேதி டெல்லியில் உள்ள போதை தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும், வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் ஜாபர் சாதிக் போதை பொருட்கள் கடத்தல் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்து இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்கு பதிவு செய்து தனது முற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

அதன்படி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநரான அமீர், அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என சென்னை முழுவதும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்திக் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஜே.எஸ்.எம், ஓட்டல், கிழக்குகடற்கரையில் உள்ள அவரது ஓட்டல்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள டீ ஷாப் மற்றும் தி.நகர் ராஜன் தெருவில் உள்ள திரைப்பட இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம், அடையார் சாஸ்திரிநகரில் உள்ள புகாரி ஓட்டல், அதன் உரிமையாளரான அப்துல் பாசித் புகாரி வீடு, பல்வேறு தொழில் பார்ட்னர்களாக இருந்த சயத் இப்ராகிம் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.

ேமலும், ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர்கள், உதவியாளர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது. அதேபோல், ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனம் பணம் உதவி மூலம் எடுக்கப்பட்ட ‘ஜாக்கி’ என்ற திரைப்படத்திற்கு கணக்காளராக பணியாற்றி வந்ததாக கொடுங்கையூர் ராம் நகர் பகுதியை சேர்ந்த ரகு ஆகியோர் வீடு என சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ஜாபர் சாதிக் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட பணம் குறித்த விபரங்கள், பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யப்பட்ட விபரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக் மூலம் எடுத்த திரைப்படத்திற்காக வாங்கிய ஊதிய கணக்கு விபரங்கள் அடங்கிய ஹாட் டிஸ்க், பென் டிரைவ், வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post போதை பொருட்கள் கடத்தலில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக், நண்பர்களுக்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி சோதனை appeared first on Dinakaran.

Tags : Aamir ,Zafar Sadiq ,CHENNAI ,Amir ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தவறான...