×

மீன் சுருட்டியில் நகை கடையில் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு

*இருவர் கைது, கார் பறிமுதல்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே நகைக்கடையில் நகை வாங்க வந்தது போல் நடித்து 10 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களில்இருவரை போலீசார் கைது செய்தனர்.அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் குப்புசாமி என்பவருக்கு சொந்தமான நகைக்கடை இயங்கி வருகிறது. கடையை அவரது மகன் ஆனந்தகுமார் ( 27)நடத்தி வருகிறார். இந்த நகை கடையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம்.

வழக்கம் போல் கடந்த 5ம்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 3 மணியளவில் கார் ஒன்றில் வந்த மூன்று மர்ம நபர்கள் காரை நகைக்கடை முன்பாக நிறுத்தி விட்டு,நகை கடைக்கு உள்ளே இரண்டு பேர் சென்றனர். காரில் கார் டிரைவர் சீட்டில் ஒருவர் இருந்துள்ளார்.நகை கடையில் தங்க செயின் எடுக்க வேண்டும், காட்டுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.5 பவுன்களில் 2 தங்க சங்கிலியை காண்பிக்குமாறு கடைக்காரர்களிடம் கேட்டு தங்க செயினை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பின்னர் தங்க செயினை போட்டோ எடுத்து அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பி வீட்டில் உள்ளவர்களுக்கு காண்பித்து அவர்கள் பிடித்ததை தேர்வு செய்து நகை எடுப்பதாக கடைக்காரரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இரண்டு ஐந்து பவுன் தங்க சங்கிலியை கையில் வைத்துக் கொண்டே பார்த்தபடியே கடைக்காரரை மீண்டும் வேறு மாடல்கள் இருந்தால் காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

அப்போது கடை உரிமையாளர் ஆனந்தகுமார் நகைகளை எடுத்து காண்பிப்பதற்காக கீழே குனிந்து வேறு மாடல்கள் உள்ள செயின்களை எடுத்து காண்பித்த போது,மர்ம நபர்கள் இருவரும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறினர்.பின்னர் கார் டிரைவர் உள்பட மூன்று பேரும் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார்,சப் இன்ஸ்பெக்டர் தனசெல்வன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் விசாரணை நடத்தினர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலை வீசி தேடி விசாரித்து வந்த நிலையில், மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பொன்னேரியில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்று வந்தது.

அந்த காரை மறித்து வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் இருந்த இரண்டு நபர்கள் முன்னுக்கு பின் முரணாக சந்தேகத்திற்கு இடமாக பேசியதால்,இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் மீன்சுருட்டி நகைக்கடையில் நகை திருடியவர்கள் என்பது தெரியவந்தது.இதையெடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் விளம்பார், கிழக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பன் மகன் வெங்கடேசன் ( 29) என்பதும்,சென்னை, கிருகம்பாக்கம்,திருவிக நகரை சேர்ந்தவர் சிவ அய்யப்பன் மகன் ராமகிருஷ்ணன் ( 26) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து 5 பவுன் செயின் ஒன்றும், அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் மற்றொரு 5 பவுன் செயினை விற்பனை செய்ததாக தெரிகிறது.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மீன் சுருட்டியில் நகை கடையில் நூதன முறையில் 10 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Meen Surutti ,Jeyangondam ,Jayangkondam ,Ariyalur ,Meensuruti ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது