×

அற்புதம் எது?

தன்னுடைய மாமனைத் திருமணம் செய்துகொள்ள, வீட்டைவிட்டு வெளியேறி ‘திருமருகல்’ என்ற தலத்தில் தங்கினாள் ஒரு பெண். அன்றிரவு அந்த ஆண்மகனைப் பாம்பு தீண்டியது. இறந்து கிடந்த அவனைத் தொடாமல் அழுதுகொண்டிருந்தாள் அந்தப் பெண். அங்கு வந்த திருஞானசம்பந்தர், நடந்ததை அறிந்து ‘ஆண்டவனைப்பாடி அந்த ஆண்மகனை உயிர்த்தெழச் செய்து’ இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருஞானசம்பந்தர், பின்னொரு நாள் மயிலாப்பூருக்கு வந்தார். அப்போது, அங்கு வாழ்ந்த சிவநேசன் செட்டியார், ஒரு சாம்பல் நிறைந்த குடத்தை ஞானசம்பந்தரின் முன் வைத்து, “இது எனது பெண்ணாகிய பூம்பாவையை எரித்த சாம்பல். அவளைத் தங்களுக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பதற்காகவே வளர்த்தேன். ஆனால், அவள் இறந்துவிட்டாள்” என்று அழுதார்.

அப்போதும், திரு.ஞானசம்பந்தர் பதிகம் பாடி, அந்தப் பெண்ணை உயிர்த்தெழச் செய்தார். இளமையும் அழகும் நிரம்பிய அந்தப் பெண்ணைத் `திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்று வேண்டினார் சிவநேசன் செட்டியார். அதற்கு சம்பந்தர், “நீங்கள் பெற்ற பெண் என்றோ இறந்துவிட்டாள். இவள் நான் பெற்ற பெண். இவளை நான் எப்படித் திருமணம் செய்துகொள்ள முடியும்?” எனக் கேட்டார். அவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், எந்தத் தவறுமில்லை. காரணம், அந்தப் பெண் சம்பந்தருக்கென்றே வளர்க்கப்பட்டவள். ஆனால், சம்பந்தர் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்.

அங்கு, திருமருகலில் அந்தப் பெண் தன் மாமனைத் தொடாமல் அழுதாள். காரணம், திருமணம் நடைபெறவில்லை. இங்கு சம்பந்தர் பூம்பாவையைத் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். காரணம், அவர் சம்பந்தர் பெற்ற பிள்ளை. இதன்மூலம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண், பெண் இருபாலருக்கும் உண்டு என்பது புலனாகிறது.

இவ்வரலாற்றை நினைந்துதானோ, “கற்புநெறி என்று பேச வந்தால் அதை இருகாட்சிக்கும் பொதுவில் வைப்போம்” என்று பாடினார் பாரதியார். இவ்வரலாற்றில் திருமருகலில் பாடி ஆண்மகனை எழுப்பியதையும், மயிலாப்பூரில் பூம்பாவையை எழுப்பியதையும்தான் அற்புதம் என்று நாம் நினைப்போம்.

ஆனால், உண்மையான அற்புதம் எதுவென்றால், திருமருகலில் அந்தப் பெண் தன் மாமனைத் தொடாமல் அழுததும், மயிலாப்பூரில் உயிர்த்தெழுந்த பெண்ணைச் சம்பந்தர் திருமணம் செய்துகொள்ளாததும்தான்.
அற்புதம் செய்வதைக் காட்டிலும், மனத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் அற்புதத்திலும் அற்புதம்.

தொகுப்பு: முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post அற்புதம் எது? appeared first on Dinakaran.

Tags : Thirumarugal ,Tirunnasambandar ,
× RELATED சைவத்தைத் தழைக்கச் செய்த திருஞானசம்பந்தர்