×

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் ராட்சத பலூன்

*பொதுமக்கள் முன்னிலையில், கலெக்டர் பறக்கவிட்டார்

திண்டுக்கல் : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை கலெக்டர் பூங்கொடி பறக்கப்பட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் வரும் ஏப்.19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் வெகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிட தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணி, மனித சங்கிலி என வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூன் பொதுமக்கள் முன்பாக பேருந்து நிலையத்தில் பறக்க விடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதற்காக, அனைத்து கல்லுாரிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியுள்ள அனைவருடைய பெயர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்குச் சாவடிக்கு செல்ல இயலாத 85 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பணி காரணமாக வாக்குச் சாவடிக்கு செல்ல இயலாத பத்திரிகையாளர்கள் வாக்களிக்கும் வகையில் விருப்பப் படிவம் வழங்கப்பட்டு அவர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாக்களிக்க வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாக்காளருக்கும், வாக்காளர் தகவல் சீட்டு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் பெயர், வாக்குச்சாவடி, பாகம், வரிசை எண் போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்தியாவில் மட்டுமே தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது முதல் வாக்குப் பதிவு செய்வது வரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் முறையான அறிவிப்புகள், விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நமக்கு விருப்பமான தலைவரை, ஆட்சியாளரை தேர்வு செய்ய நமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பாக இதனை கருத வேண்டும். மேலும் இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த வாய்ப்புக்காக 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே நான் ஒரு இந்திய குடிமகன் என்ற உரிமையை நிலைநாட்டுவதற்காக தேர்தல் ஓட்டுரிமையை பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி, தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக சென்று ஏப்.19 அன்று தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளர் அருணாச்சலம், கனரா வங்கி உதவிப் பொது மேலாளர் பல்லானி ரங்கநாத், திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொது மேலாளர் திவ்யா தேஜா கசரனேனி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் சந்திரகாந்த், இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் ராட்சத பலூன் appeared first on Dinakaran.

Tags : Giant balloon ,Dindigul ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...