×

மோடி கொடுத்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றவில்லை டம்மி காசோலையை காண்பித்து திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம்

சத்தியமங்கலம் : நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா நேற்று பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர், சத்தியமங்கலம் மற்றும் கிராமப்பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். புஞ்சை புளியம்பட்டியில் பிரசாரம் செய்தபோது கருப்பு பணத்தை மீட்டு பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறிய மோடியின் அவல ஆட்சியை விளக்கி கூறும் விதமாக ரூ.15 லட்சத்திற்கான டம்மி காசோலையை தயார் செய்து பொதுமக்கள் மத்தியில் காண்பித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். மேலும், ஆட்டுக்குட்டிக்கு கழுத்தில் மாலை அணிவித்தும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பவானிசாகர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் விண்ணப்பள்ளி பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தாமல் இளைஞர்களை ஏமாற்றிய பாஜக அரசை கண்டித்து வடை சுட்டு பொதுமக்களுக்கு வழங்கி ஆ.ராசா நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள் மத்தியில் ஆ.ராசா பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமைத்திட்டத்தை அறிவித்த போது இதையெல்லாம் வழங்க முடியுமா? என எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்தார்கள். ஆனால், முதல்வர் சொன்னபடியே மகளிர் உரிமைத் தொகை வழங்கியுள்ளார். மகளிருக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் மூலம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் செலவினத்தை குறைத்துள்ளதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை பெறும் விதமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக., அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் பத்தாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வருகிறது.

மோடி அரசை குறை கூறினால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளை ஏவி அரசியல் தலைவர்களை அச்சுறுத்தி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தியாவை காப்பாற்ற நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு நாமெல்லாம் கை கொடுக்கும் விதமாக இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தின் போது, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அமுதரசன், மாநில விவசாய அணி செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் கீதா நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், புஞ்சைபுளியம்பட்டி நகர செயலாளர் பி.ஏ. சிதம்பரம், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கேசிபி இளங்கோ, சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெயராஜ், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் எல்.முத்துக்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன், வி.சி.க மாவட்ட செயலாளர் மிசா தங்கவேல், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மற்றும் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

The post மோடி கொடுத்த வாக்குறுதி எதுவும் நிறைவேற்றவில்லை டம்மி காசோலையை காண்பித்து திமுக வேட்பாளர் ஆ.ராசா பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,A. Raza ,Modi ,Sathyamangalam ,Nilgiri ,Punjaipuliambatti ,Bhavanisagar ,Puliambatti ,Punjai ,Dinakaran ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...