×

கெஜ்ரிவாலுக்கு சிறை: வாக்குசீட்டு மூலம் சர்வாதிகார ஆட்சிக்கு பதிலடி: ஆம் ஆத்மி தலைவர் பேச்சு

புதுடெல்லி: மதுபானக்கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள மொத்தம் 7 மக்களவை தொகுதிகளில் புதுடெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி ஆகிய நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய நிலையில் கட்சியின் நட்சத்திர பேச்சாளரான கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத சூழல் உள்ளது. ஆனால், தற்போது ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் சிறையில் இருப்பதை மையப்படுத்தி தேர்தல் பிரசாரத்தை வடிவமைத்து தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கட்சி எம்பி சந்தீப் பதக் கூறுகையில்,‘‘பாஜவின் மிக பெரிய சதி திட்டத்தின்படி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து மக்களை ஆம் ஆத்மி தொண்டர்கள் சந்தித்து கெஜ்ரிவாலை சிறையில் அடைத்ததற்கு வாக்குசீட்டு மூலம் தேர்தலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாரம் செய்வோம்’’ என்றார். அந்த கட்சியின் மூத்த தலைவர் கோபால் ராய்,‘‘சர்வாதிகார ஆட்சிக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பர்’’ என்றார்.

The post கெஜ்ரிவாலுக்கு சிறை: வாக்குசீட்டு மூலம் சர்வாதிகார ஆட்சிக்கு பதிலடி: ஆம் ஆத்மி தலைவர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi ,New Delhi ,Delhi ,Chief Minister ,Kejriwal ,Aam Aadmi Party ,Lok Sabha ,Delhi, New Delhi, East ,
× RELATED கை விலங்குக்கு வாக்குகளால் பதிலடி...